தியாகத் தீ.. சிவகங்கை சீமையை கைப்பற்றியவர்.. இந்தியாவின் முதல் வீரமங்கை.. வேலு நாச்சியார்!

Jan 03, 2026,03:13 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ


ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்டு தனது ராஜ்ஜியத்தை மீட்டியவர். வாள்வீச்சு, குதிரையேற்றம், பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ஹைதர் அலியின் உதவியுடனும், குயிலி போன்ற தளபதிகளின் தியாகத்துடன்,சிவகங்கை சீமையை கைப்பற்றியவர்.  இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராளி, 'வீரமங்கை' எனப் போற்றப்பட்ட வேலு நாச்சியாரை பற்றி தெரிந்து கொள்வோம்.  


1730-ல் இராமநாதபுர மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே மகளாகப் பிறந்தார். ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டு, வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற போர்க்கலைகளில் பயிற்சி பெற்றார்.தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது போன்ற பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். 


1746-ல் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்தார்.1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார்.




தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும், அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.


வேலு நாச்சியார் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிச்செல்ல ஏதுவாக, ராணியின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் உடையாள் மற்றும் பிற பெண் போராளிகள் அங்கேயே தங்கிவிட்டார்கள். நவாபின் ஆட்கள் உடையாளை பிடித்தனர். அவரை துன்புறுத்திய போதிலும் ராணியின் இருப்பிடத்தை அவர் கூறவே இல்லை. இதனால், அவரது தலை துண்டிக்கப்பட்டது.


காடுகளிலும் கிராமங்களிலும் ஆதரவற்று அலைந்து திரிந்த ராணி வேலு நாச்சியார், சிவகங்கையை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க ஆதரவாளர்களும் உதவி செய்பவர்களும் தேவை என்பதை உணர்ந்தார். மருது சகோதரர்கள் விசுவாசிகளின் படையை உருவாக்கத் தொடங்கினர். ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள அது போதுமானதாக இருக்கவில்லை. மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு, ஆங்கிலேயர்களுடனோ அல்லது ஆற்காடு நவாபுடனோ நல்லுறவு இருக்கவில்லை. அதனால் ராணி வேலுநாச்சியார் அவரின் உதவியைப் பெற முடிவு செய்து மைசூர் வரை ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.


சிவகங்கையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லில் ஹைதர் அலியைச் சந்தித்தார் வேலு நாச்சியார். அவர் ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி தன்னுடைய தைரியத்தாலும் உறுதியாலும் அவரைக் கவர்ந்தார். வேலுநாச்சியார் திண்டுக்கல் கோட்டையில்  அடைக்கலமாக ஹைதர் அலியின் விருப்பபடி இருந்தார்.  ராணி போல் அவருக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. நட்பின் அடையாளமாக ஹைதர் அலி தனது அரண்மனைக்குள் வேலுநாச்சியாருக்காக ஒரு கோவிலையும் கட்டினார்.


சிவகங்கையை மீட்டெடுத்தல்:


உடையாள் மற்றும் குயிலியின் தியாகத்தாலும், மருதுபாண்டி சகோதரர்களின் வீரத்தாலும், ஹைதர் அலியின் உதவியினாலும், வேலு நாச்சியாரின் வீரத்தாலும் சிவகங்கையை மீட்டெடுக்க முடிந்தது. 


வெற்றிக்குப் பிறகு வேலு நாச்சியார் ஒரு தசாப்தம் ஆட்சி செய்தார். இக்கட்டான காலத்தில் உறுதுணையாக இருந்த தனது தோழர்களுக்கு ராஜ்ஜியத்தில் முக்கிய பதவிகளை வழங்கினார். வேலு நாச்சியார் ஹைதர் அலியின் வரம்பற்ற உதவியை கெளரவிக்கும் விதமாக சார்கானியில் ஒரு மசூதியைக் கட்டினார்.


ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாம் மைசூர் போரில் வேலு நாச்சியார் ஹைதர் அலியை ஆதரித்து அவருக்கு உதவியாக தனது ராணுவத்தை அனுப்பினார். 


ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு வேலுநாச்சியார் அவரது மகன் திப்பு சுல்தானுடன் நட்புறவைப் பேணி, அவரை ஒரு சகோதரனைப் போல நேசித்தார். வேலு நாச்சியார் திப்பு சுல்தானுக்கு ஒரு சிங்கத்தை அன்பளிப்பாக அனுப்பினார்.


இப்படி சிறப்பு வாய்ந்த வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்றை நாம் அனைவரும் தெரிந்து கொண்டதில் பெருமை அடைவோம். ஒவ்வொரு பெண்களும் தைரியமாக  வீரத்துடன் வாழ்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TAPS: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுத்த ஹேப்பி நியூஸ்.. அறிக்கையின் முழு விவரம்!

news

I am Coming.. திரும்பி போற ஐடியாவே இல்ல.. விஜய்யின் ஜனநாயகன் பட டிரைலர் எப்படி இருக்கு?

news

வெனிசுலா அதிபர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தல்...டிரெம்ப் அறிவிப்பு

news

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்...முதல்வர் அறிவிப்பு

news

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லத் தயாரா?... 150 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல்? நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் புதிய சாதனை

news

காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

news

திமுக தேர்தல் அறிக்கை: மொபைல் செயலியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

அதிகம் பார்க்கும் செய்திகள்