Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!

May 04, 2026,09:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டு அரசியலை புதிய பாதைக்குத் திருப்பி விட்டுள்ளார் சந்திரசேகர் ஜோசப் விஜய்.. சுருக்கமாக விஜய். இனி தமிழ்நாட்டு அரசியல் வேற மாதிரி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


யாராலும் செய்ய முடியாது, அதெல்லாம் அசைக்கக் கூட முடியாது என்று கூறப்பட்டு வந்த ஒரு விஷயத்தை, இதை வச்சுக்கிட்டா உருட்டிட்டு இருந்தே என்று பரவை முனியம்மா ரேஞ்சுக்கு தூக்கிப் போட்டு ஓரம் கட்டியுள்ளார் விஜய்.


விஜய்யின் அரசியல் நிச்சயம் கூர்ந்து கவனிக்கத்தாக மாறியுள்ளது. காரணம், ஆரம்பத்திலிருந்தே அவரது அணுகுமுறை படு வித்தியாசமாக இருந்தது. அவரை பெரும்பாலான அரசியல் தலைவர்களும், கட்சிகளும் தவறாகவே எடை போட்டு விட்டன, குறைத்து மதிப்பிட்டு விட்டன. 


ஆனால் அதையெல்லாம் விஜய் பொருட்படுத்தவே இல்லை. எதையுமே அவர் கண்டு கொள்ளவில்லை. அவரிடமிருந்து வந்தது புன்னகை மட்டுமே. அவர் முழுக்க மக்களை நம்பினார், தனது கட்சியினரை நம்பினார், தனது ரசிகர்களை நம்பினார். இவர்கள் எனக்குப் போதும்.. மற்றவர்களை நான் பொருட்படுத்த்த தேவையில்லை என்ற முடிவில் விஜய் இருந்தார். அவர் போட்ட கணக்குகள் அனைத்துமே சரியாகப் போய் விட்டது.


மரியாதையான பேச்சு




விஜய் தனது பிரச்சாரத்தின்போதும், கட்சிக் கூட்டங்களின்போதும், ஒரு தலைவரைக் கூட அநாகரீகமாக பேசியதில்லை, ஒருமையில் விளித்தது இல்லை, யாரையும் மோசமாக விமர்சித்தது இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினை சார் என்றுதான் அவர் அழைத்து வந்தார். இடையில் அங்கிள் என்று அவர் அழைத்தபோது கூட அது தவறாகப் பார்க்கப்படவில்லை (திமுகவினர் மட்டுமே அதை ஆட்சேபித்தனர்). காரணம், முதல்வரை தனிப்பட்ட முறையில் அவர் அங்கிள் என்றுதான் அழைப்பார்கள் என்பதால் அந்த எதிர்ப்பும் கூட எடுபடவில்லை.


எந்த தலைவரையும் அவர் தேவையில்லாமல் விமர்சிக்கவில்லை. சீமான் பெயரைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கவில்லை. தேமுதிகவை விமர்சிக்கவில்லை. அதிமுகவையும் கூட அவர் கடுமையாக விமர்சித்தது இல்லை. பாஜகவை விமர்சிக்கவில்லை. திமுகவை மட்டுமே அவர் டார்கெட் செய்தார். அப்போதும் கூட நிதானம் இழக்காமல், அகம்பாவ தொணி தெரியாமல் இயல்பான முறையில் அவர் விமர்சித்தது மக்களை வெகு வேகமாக ரீச்சாகி விட்டது.


போகஸில் மாறவில்லை


தனது நோக்கம், இலக்கு என்ன என்பதில் விஜய் தெளிவாக இருந்தார். கிட்டத்தட்ட குதிரை போல  அவர் பயணித்தார். சைடில் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. பக்கவாட்டில் என்ன நடந்தாலும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. திசை திரும்பவில்லை.


கரூர் சம்பவம் மிக மிகத் துயரமானது. அதிலும் கூட அவர் நிதானம் காத்தார். கடைசியில் அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மீது திருபிய புகார்கள் அத்தனையும் எடுபடாமல் போய் விட்டது.


சினிமா செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை


விஜய்க்கு சினிமாவில் எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவரது கூட்டங்களிலும் சரி, பேச்சுக்களிலும் சரி சினிமா செல்வாக்கை அவர் பயன்படுத்தவில்லை. சினிமா பன்ச் வசனத்தைப் பயன்படுத்தியது இல்லை. சினிமாவில் தனக்கு ஆதரவானவர்களை அவர் அணி திரட்டவில்லை.


விஜய் கட்சி வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான தொகுதிகளில் பணத்தை வாரியிறைக்காமல் சிம்பிளாக பணியாற்றியே வெற்றியைப் பெற்றுள்ளனர். இது தமிழ்நாட்டு அரசியலில் புதுசு. பணமே இல்லாமல் பெருவாரியான தொகுதிகளை தவெக வென்றுள்ளது என்பதே மிகப் பெரிய ஆச்சரியம்தான்.


திராவிடக் கட்சிகளைப் போல வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை தவெக. சில தொகுதிகளில் செலவிட்டுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் பெருவாரியான தொகுதிகளில் பணத்தைக் கொடுத்து வாக்கைப் பெறவில்லை தவெ என்பதை அடித்துக் கூற முடியும்.


அதேசமயம் மக்கள் பலரும் திமுக, அதிமுகவிடம் பணம் வாங்கினாலும் கூட ஓட்டை தவெகவுக்கு மாற்றிப் போட்டு அதிர வைத்துள்ளனர். இந்தத் தேர்தலின்மூலம் இனி திராவிடக் கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கேவலம் முடிவுக்கு வரும் என்று நம்பலாம்.


விஜய் செய்துள்ள சாதனை அசாதாரணமானது. திமுக, அதிமுக என இரு பெரும் அரசியல் சக்திகளை அரசியலுக்கு வந்த 2 வருடத்தில் காலி செய்துள்ளார் விஜய். ஒரு சின்னத்தை இந்த அளவுக்கு விஸ்வரூப வெற்றி பெற வைப்பதெல்லாம் மிகப் பெரிய சாதனைகளில் முக்கியமானது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசு என இரு பெரும் அரசுகளைக் கையில் வைத்திருந்த இரு பெரும் சக்திகளை சந்தித்து சாதித்துள்ளார் விஜய்.


விஜய் அலை மிக மிக சாதாரணமாகத்தான் காட்சி அளித்துள்ளது. கரையில் வந்து அது மோதியபோதுதான், அது சாதாரண அலை அல்ல.. சுனாமி என்பதை கட்சிகள் உணர்ந்துள்ளன. புதிய அரசியல் பாதையை விஜய் போட்டுள்ளார். இனி விஜய் அரசியல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

news

மயக்கமும் தயக்கமும்

news

பரபரப்பாகும் தைலாபுரம்...ராமதாசை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்!

news

காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!

news

வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!

news

ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!

news

மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

அதிகம் பார்க்கும் செய்திகள்