அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.க்கள் நிலை.. அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?

May 21, 2026,03:20 PM IST

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் இல்லை என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது. இனி அவர்களின் நிலை என்ன? அவர்கள் என்ன செய்தால் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் உள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக எப்படியும் இந்த முறை வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து விடும். மீண்டும் எம்எல்ஏ.,ஆகி, அமைச்சர் பதவியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புடன் அதிமுக.,வில் மூத்த நிர்வாகிகள் பலரும் தேர்தலில் களம் கண்டார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் விசிக.,வின் ஆதரவுடன் ஆட்சியும் அமைத்து விட்டார்கள். அது மட்டுமின்றி தேர்தலில் அதிமுக., இந்த முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டதால், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவது மிகப் பெரிய போராட்டமாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இதனால் அதிமுக தலைமை மீது அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள், தங்களுக்கு ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என விஜய் அறிவித்ததை நம்பி, மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்த்து சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அதிமுக தலைமை உத்தரவையும் மீறி 25 எம்எல்ஏ.,க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால் அவர்களின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறி போனது. 




இருந்தாலும் விஜய், அமைச்சரவையில் இடம் தருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக, அமைச்சரவையில் அதிமுக.,வுக்கு இடம் அளித்தால், தவெக.,விற்கு ஆதரவு அளித்தது பற்றி பரிசீலிக்கப்படும் என இடதுசாரிகள் அறிவித்து விட்டனர். இதனால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் இடம் தரும் முடிவை தவெக கடைசி நிமிடத்தில் கைவிட்டது. 


இதுவரை தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்களுடன் சேர்த்து 33 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவியேற்று விட்டனர். அவர்களுக்கான இலாகா.,க்களும் ஒதுக்கப்பட்டு விட்டது. அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற முடியும் என்கிறது சட்டம். மீதமுள்ள 2 இடங்களில் ஒன்று தங்களுக்கு தான் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்து விட்டது. மற்றொன்றை விசிக ஏற்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை விசிக அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை என்றால் அந்த மற்றொரு இடமும் முஸ்லீம் லீக் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பது உறுதியாகி விட்டது.


இதனால் அடுத்த கட்ட நகர்வு குறித்து அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் அவசரமாக கூடி ஆலோசித்து வருகிறார்கள். மற்றொரு புறம் இபிஎஸ் தலைமையில் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசித்து வருகின்றனர். இப்போது அதிமுக அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ஒன்று இபிஎஸ் இடம் சரணடைய வேண்டும். இல்லை என்றால் தவெக.,வில் ஐக்கியமாக வேண்டும். அப்படி தவெக.,வில் சேர்ந்தால் ஏதாவது பொறுப்பு கிடைக்கலாம். ஆனால் கட்சி தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் எம்எல்ஏ., பதவிகள் பறி போகும். 


ஒருவேளை மீண்டும் தேர்தல் வந்து அவர்களே போட்டியிட்டாலும் மீண்டும் வெற்றி பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம், பதவிக்காக தான் அவர்கள் அதிமுக.,வில் இருந்து விலகி வந்ததை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தவெக சின்னத்தில் போட்டியிட ஒரு வேளை வாய்ப்பளிக்கப்பட்டால் தவெகவுக்கும் கெட்ட பெயர் ஏற்படும்.


இந்த இரண்டு வாய்ப்பு இல்லை என்றால், மூன்றாவது இருக்கும் வாய்ப்பு, தனியாக ஒரு இயக்கம் துவங்கி நடத்துவது தான். ஆனால் அதற்கு மக்களிடம் செல்வாக்கும், ஆதரவும் கிடைக்குமா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை. இதனால் இவர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது கடைசியில்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்