பா.ஜ.க.,வை சகட்டுமேனிக்கு விளாசிய ஸ்டாலின்: கடும் கோபத்திற்கு காரணம் என்ன?

Jun 16, 2023,10:50 AM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து அழைத்து செல்லும்போது, செந்தில் பாலாஜி திடீரென நெஞ்சுவலியால் துடிக்க ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை இல்லாத அளவிற்கு கோபமடைந்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக பா.ஜ.க., அரசு, அமலாக்கத்துறையை வைத்து திமுக.,வுக்கு அதிகளவு அழுத்தம் கொடுத்துள்ளதை அவரது கோபத்தின் மூலம் அறிய முடிகிறது.

அதாவது, நேற்று ஸ்டாலின் பேசிய வீடியோவில், பா.ஜ.க.,வை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: பா.ஜ.க., தலைமை அமலாக்கத்துறை மூலமாக தங்களின் அரசியலை செய்ய நினைக்கிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவதே பா.ஜ.க.,வின் வாடிக்கை. இதைதான் இந்தியா முழுவதும் தொடர்கின்றனர். ஒரே ஒரு ஸ்கிரிட்டை வேறு வேறு மாநிலங்களில் ‘டப்பிங்’ செய்கின்றனர்.



மஹாராஷ்டிராவில் சிவசேனா எதிர்த்தால், அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத்தை கைது செய்கின்றனர். டில்லியில் ஆம்ஆத்மி எதிர்த்தால், அக்கட்சியின் அமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்கின்றனர். பீஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் எதிர்த்தால், அக்கட்சியை சேர்ந்த பீஹார் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ்க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துகிறது. மேற்குவங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பா.ஜ.க.,வை எதிர்த்ததால், அக்கட்சியினரை ரெய்டு செய்கின்றனர். 

அதேபோல், கர்நாடக காங்., தலைவர் டி.கே.சிவகுமாரை கைது செய்தனர். அவர் கர்நாடக தேர்தலில் வெற்றிப்பெற்று இப்போது துணை முதலமைச்சராகவே ஆகிவிட்டார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது, தெலுங்கானாவில் அமைச்சருக்கு தொடர்புள்ள இடங்களில் ரெய்டு, சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர்பான இடங்களில் ரெய்டு; ஆனால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனெனில், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது ‘உத்தமபுத்திரன்’ பா.ஜ.க.,. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத்துறைக்கோ, சிபிஐ.,க்கோ தெரியாது.

பா.ஜ.க.,வை எதிர்க்கிற அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் பா.ஜ.க.,வின் துணை அமைப்புகள் ரெய்டு நடத்தி விட்டார்கள். அப்படி இல்லையென்றால், அதிமுக மாதிரி அடிமைகளை, இந்த விசாரணை அமைப்புகளை காட்டி மிரட்டி அடிபணிய வைத்து விடுவார்கள். பா.ஜ.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112 தான். ஆனால், பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பின்னர், எதிர்க்கட்சிக்காரர்களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 சதவீதம் தான்! மற்றபடி எல்லா ரெய்டுகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.

இப்படி ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க.,வில் சேர்ந்த பின்னர் ‘புனிதர்கள்’ ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட புனிதர்கள் மேல் வழக்குள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது என காங்., மூத்த தலைவர் சசி தரூர் ஒரு பட்டியலையே போட்டிருக்கிறார். இப்படி தன் கோபத்தை வார்த்தைகளால் கொட்டி தீர்த்துள்ளார் ஸ்டாலின்.

பா.ஜ.க.,வை இவ்வளவு கடுமையாக எதிர்க்கும் ஸ்டாலினை இதுவரை அவரது கட்சியினரே கண்டதில்லை. முதன்முறையாக அவரது பேச்சில் பா.ஜ.க., மீதான அதீத கோபம் வெளிப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்தியா முழுவதும் ஒவ்வொரு எதிர்க்கட்சியாக விசாரணை அமைப்புகள் மூலமாக பா.ஜ.க., மிரட்டி வந்த நிலையில், தற்போது தனது கட்சி அமைச்சரையும் அதுவும், தேர்தல்களில் திமுக.,வின் வெற்றிக்கு அதிகம் பாடுபட்ட, செலவு செய்த ஒருவரை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்காக ஸ்டாலின் ஆவேசமடைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

ஆம், லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் அதிமுக - பா.ஜ.க., வசம் இருந்த கொங்கு மண்டலத்தை அப்படியே திமுக கோட்டையாக வசமாக்க பெரிதும் உதவியது செந்தில் பாலாஜி மட்டும்தான். அந்த அளவிற்கு கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்பட்ட ஒரு தூணையே பா.ஜ.க., சாய்த்துவிட்டதாக ஸ்டாலின் கருதுகிறார். மேலும், இன்னும் 10 மாதங்களில் லோக்சபா தேர்தல் வர உள்ளதால், பா.ஜ.க.,வை கடுமையாக எதிர்க்க இந்த ரெய்டு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது. இதுவே ஸ்டாலினின் கோபத்தின் காரணமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்