உயிரின் ஓசை!

Jun 01, 2026,01:21 PM IST

- கவிதா அறிவழகன்


நிசப்தம் ஆளும் நிலவின் மடியில்,

இரவின் ஓசையும்,

உயிரின் ஓசையும்,

ஒன்றோடு ஒன்று

ஐக்கியமாகும் வேளையில்...


எங்கிருந்தோ வந்த நட்சத்திரக் கூட்டங்கள்,

மௌனமாக உயிருடன் கலந்து பேசத் தொடங்கின.


இமைமூடி நினைவுகள் ஆழ்ந்த வேளையில்,

இதயத்துடிப்பின் ராகமும்,

நட்சத்திரங்களின் ரகசியக் காதலும்

அழகாகச் சங்கமிக்க

ஆரம்பித்தன.




காற்றோ தன் பங்கிற்கு இணையாக,

மரங்களின் ஊடே 

பாட்டிசைக்கத் தொடங்கின!


இரவின் வண்டுகளோ,

காற்றின் இசைக்கு ஏற்பத் தாளங்கள் போட்டன.


இத்தகைய இரவின் பேரமைதிக் கச்சேரியில்,

விடை தெரியா கேள்விகள் அனைத்தும்

நட்சத்திரக் கூட்டங்களின் ஒளியினில்

சுவடுகளின்றி கரைந்து போயின!


என் உயிரினுள் என்றும் கிடைக்காத

சந்தோஷமும், பேரமைதியும் -

இந்த ஏகாந்த ஓசையில்

இன்று...

ததும்பி நிரம்பி வழிந்தது!


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்