சென்னை: உடல் நிலை சரியில்லை, அவசரமாக சிகிச்சை பெற வேண்டியுள்ளது. எனவே என்னால் பிரச்சாரத்தைத் தொடர முடியாது என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு முக்கியத் தலைவர்கள் போட்டிக் களத்தில் இருப்பதால் பரபரப்பான எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையில் நடிகை குஷ்பு மிகவும் தாமதமாகத்தான் பிரச்சாரக் களத்திற்கு வந்தார். மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்திருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் பிரச்சாரத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
உடல் நிலை காரணமாக தான் பிரச்சாரத்தை விட்டு வெளியேறுவதாக அவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

வாழ்க்கை கணிக்க முடியாதது. சில நேரங்களில் நாம் சிறப்பாக செயல்பட விரும்பும்போது அது வேறு ஒன்றை நமக்கு வைத்திருக்கும். அப்படிப்பட்ட நெருக்கடிதான் தற்போது எனக்கும் வந்திருக்கிறது. 2019ம் ஆண்டு டெல்லியில் நடந்த எதிர்பாராத விபத்தில் சிக்கிய பின்னர், எனக்கு (tail bone) எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக இது என்னை சிரமப்படுத்தி வருகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து வரும் நிலையிலும் கூட இந்த காயம் குணமடையாமல் உள்ளது.
இந்த நிலையில் நான் தீவிரப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று எனது மருத்துவக் குழு கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளது. அப்படிச் செய்தால் எனது உடல் நிலை மேலும் மோசமடையும் என்று அது எச்சரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான நான் என்னால் முடிந்தவரை பிரச்சாரம் செய்தேன். வலியையும் பொறுத்துக் கொண்டு, டாக்டர்களின் எச்சரிக்கையையும் மீறி பிரச்சாரம் செய்தேன். ஆனால் இப்போது எதிர்பார்த்தது போல நிலைமை மோசமாகியுள்ளது.
பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின்னர் தற்போது அவசரமாக, முக்கிய சிகிச்சையை செய்தாக வேண்டியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது மேஜரான அறுவைச் சிகிச்சையோ அல்லது உயிருக்கு ஆபத்தான சிகிச்சையோ அல்ல என்ற போதிலும் இதை தாமதப்படுத்தக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். தாமதப்படுத்தினால், குணமடைவது தாமதமாகும் அல்லது குணமடையாமலேயே கூட போகக் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். அதீத பயணங்கள், பிரச்சாரங்கள், நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்றவற்றை என்னால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வருகிற தேர்தலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமான நேரத்தில் பிரச்சாரத்தைத் தொடர முடியாமல் போவது வருத்தம் தருகிறது, வலியைத் தருகிறது. இருப்பினும் எனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக பாஜகவின் கொள்கைகள், சிந்தனைகள், பிரச்சாரங்களைக் கொண்டு செல்வேன்.
பிரதமர் பதவியில் மூன்றாவது முறையாக நிச்சயம் நமது பிரதமர் நரேந்திர மோடி அமருவார், பதவி ஏற்பார் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன், எதிர்நோக்கியிருக்கிறேன். இது நாள் வரை கொடுத்து வந்த ஆதரவுக்கும், அன்புக்கும், புரிந்து கொள்ளுதலுக்கும் எனது நன்றிகள் என்று கூறியுள்ளார் குஷ்பு.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}