பாஜகவுக்கு எதிராக கடுமையாக களமாடியவர்.. நடிகை வினோதினி மநீமவிலிருந்து விலகியது ஏன்?

Jan 30, 2025,08:35 PM IST

சென்னை : நம்மவர் போன்ற மகத்தான தலைவர்களை இழந்தது தமிழ்நாடு மட்டுமல்ல. வினோதினியும் தான். மய்யத்திலிருந்து வருத்தத்துடன் வெளியேறுகிறேன் என நடிகை வினோதினி வைத்தியநாதன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.   அவரது விலகல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் அனன்யாவுக்கு சகோதரியாக அறிமுகமானவர்தான் நடிகை வினோதினி வைத்தியநாதன். இவர் இப்படத்தின் மூலம் குணச்சத்திர நடிகையாக அறிமுகமாகி பல்வேறு தரப்பினரிடையே ஈர்க்கப்பட்டார். 


தொடர்ந்து கோமாளி படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் பரவலாக பேசப்பட்டது. ராட்சசன்,அப்பா, ஓகே கண்மணி, ஜிகர்தண்டா,

சூரரைப் போற்று, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்திருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். 




தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல புத்திசாலி நடிக நடிகையர் அரசியலுக்கு வருவதுண்டு. அந்த வகையில் இவரும் அரசியல் பக்கம் வந்தார். ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் மக்கள் சார்பான பிரச்சினைகள் குறித்தும், அரசியல் நிகழ்வுகள் குறித்தும் அதிரடியாக கருத்துக்களைத்  தெரிவித்து வந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடிகை வினோதினி கமல்ஹாசன் நடத்திவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைந்து கொண்டு, பணியாற்றி வந்தார். 


இந்த நிலையில் வினோதினி தற்போது, கமல் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மக்கள் நீதி மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன். அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை - எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது. ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத் தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.


பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது - கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல.


அமெரிக்க அரசியலில் ஒரு term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை career politicianகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் - career politicianகளைவிட businessman ஆன Trump எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், இதைத்தான் அமெரிக்காவின் founding fathersஉம் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.


கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.


நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான்.


தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.


65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.


அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே என  பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்