தேமுதிகவுடன் கூட்டணியா.. பிரேமலதாவை சந்தித்தது ஏன்?.. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விளக்கிய வேலுமணி!

Mar 01, 2024,07:29 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து அதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


அதிமுக - தேமுதிக கட்சிகளுக்கு இடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை  இன்று முறைப்படி அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கு அதிமுக தலைவர்களான,  முன்னாள்  அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் வந்தனர்.


தேமுதிக தரப்பில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர். பிரேமலதா விஜயகாந்துக்கு அதிமுக தலைவர்கள் பொன்னாடை போர்த்தினர். அதேபோல அதிமுக தலைவர்களுக்கு சதீஷ் பொன்னாடை போர்த்தினார்.




இந்த இரு கட்சிகளும் கடந்த லோக்சபா தேர்தலிலும் இணைந்தே போட்டியிட்டன. அப்போது 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டுத் தோல்வியைச் சந்தித்தது. இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி சேருவதா அல்லது பாஜகவுடன் போவதா என்ற குழப்பம் தேமுதிகவுக்கு இருந்தது. அதேசமயம், அவர்கள் கேட்டது போல சீட் கொடுக்க பாஜகவும் சரி, அதிமுகவும் சரி தயாராக இல்லாத நிலையும் ஏற்பட்டது. இதனால் தேமுதிகவின் நிலைப்பாடும், அதன் தேர்தல் பங்கேற்பும் குழப்பமாகவே இருந்தது.


இப்படிப்பட்ட நிலையில் இன்று தேமுதிக தலைவர்களுடன் அதிமுக தலைவர்கள் திடீரென ஆலோசனையில் இறங்கியுள்ளனர். இதுதான் இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் முதல் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையாகும். இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிகளை முடிவு செய்ய இரு கட்சித் தலைவர்களும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


அதிமுகவைப் பொறுத்தவரை 5 சீட் வரை தேமுதிகவுக்கு சீட்களை விட்டுத் தர தயாராக இருப்பதாக தெரிகிறது. அதேசமயம், தேமுதிக வலியுறுத்துவது போல ராஜ்யசபா சீட்டை அதிமுக தராது என்று கூறப்படுகிறது. காரணம், பாமகவும் ராஜ்யசபா சீட்டைக் கேட்டுக் கொண்டுள்ளது. தேமுதிகவுடன் ஒப்பிடுகையில் பாமக வலுவான கட்சி என்பதால் பாமகவுக்கே ராஜ்யசபா சீட்டை அதிமுக விட்டுத் தர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.


மரியாதை நிமித்தமான சந்திப்பு.. குழு அமைத்து பேசுவோம் - வேலுமணி 


இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை அதிமுக தலைவர்கள் சந்தித்தனர். அப்போது எஸ்.பி.வேலுமணி பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்தோம். சுதீஷும் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 2 பக்கமும் குழு போடப்படும் என்று சொல்லியுள்ளனர். மற்றவை குறித்து பிறகு பேசப்படும் என்றார்.


இதை கூட்டணி உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் நேரத்தில் இரு கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினால் அதை எப்படி எடுத்துக் கொள்ள முடியும் என்று வேலுமணி பதிலளித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளோம். மரியாதை நிமித்தமாக பேசியுள்ளோம். குழு போட்டவுடன் பேசப்படும் என்று மட்டும் கூறி விட்டு அதிமுக தலைவர்கள் கிளம்பிச் சென்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்