உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி

May 16, 2026,02:43 PM IST

சென்னை: திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து விவகாரம், தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. 


இன்று காலை நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆவேசமான பதிவு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


"மௌனத்தை பலவீனமாக நினைக்க வேண்டாம்"


தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்த்தி ரவி, தனது கண்ணியமான மௌனம் பலவீனமாகக் கருதப்படக் கூடாது என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளதாவது: "தூங்கும் சிங்கத்தை யாரும் வம்புக்கிழுக்கக் கூடாது. அதுவும் அந்த சிங்கம் ஒரு தாயாக இருந்தால், கடவுள் தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான மௌனத்தை யாரும் பலவீனமாகவோ அல்லது எனக்கு சாதகமற்ற ஒன்றாகவோ தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது."


மேலும், "தேவைப்பட்டால், எனது குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும், எனது கண்ணியத்தைக் காப்பாற்றவும், நான் எனது கம்பர்ட் ஜோனை (சொகுசு வளையத்தை) விட்டு வெளியே வந்து, முழு உண்மையோடு இந்த உலகத்தை எதிர்கொள்வேன். ஏனெனில், எப்போதும் உண்மையே வெல்லும்!" என்று அவர் மிகவும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.


"உண்மையோடு உலகை எதிர்கொள்வேன்"




சமீப காலமாக இந்த விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், தனது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஆர்த்தி மறைமுகமாக உணர்த்தியுள்ளார். "உண்மையே எப்போதும் வெல்லும்" ("Truth always prevails") என்ற வாசகத்துடன் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


குஷ்பு ஆதரவு:


ஆர்த்தியின் இந்தப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக, நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர் இந்தப் பதிவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். 


அவர் தனது கமெண்ட்டில், "ஒரு தாயிடம் எப்போதும் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது. தன் குட்டிகளுடன் இருக்கும் ஒரு பெண் சிங்கம் நீ. உனக்கு இன்னும் கூடுதல் சக்தி கிடைக்கட்டும் என் செல்லமே" என்று பதிவிட்டு, ஆர்த்திக்குத் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.


நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே ஆர்த்தி ரவி இந்த அதிரடிப் பதிவை வெளியிட்டிருப்பது, இருவருக்கும் இடையேயான சட்டப் போராட்டம் மற்றும் கருத்து வேறுபாடுகள் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது என்பதையே காட்டுகிறது. இந்த விவகாரம் இணையதளங்களில் தற்போது காட்டுத்தீயாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 


முன்னதாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், ஆர்த்தியை கடுமையாக விமர்சித்து, எச்சரித்திருந்தார். அதோடு விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும் அவர் அறிவித்திருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்