மலரும் மனது!

Jan 12, 2026,02:13 PM IST

- கவிதா அறிவழகன்


அழகான ரோஜாக்களை கண்டு

லயித்து நின்றேன்.

அந்த அழகிய நிறமும், 

அந்த ஆழமான அமைதியும்

என்னை சிறிது நேரம் 

இவ்வுலகத்திலிருந்து பிரித்து வைத்தன. 




ரோஜாவின் அழகில் மயங்கி நின்ற அந்த நொடியில், 

தென்றலும் வந்து என்னை வருடியது.

அப்போது

ரோஜா பூ என்னை பார்த்து புன்னகைத்தது. 

அந்த சிரிப்பின் ஆழத்தை 

புரிந்துகொள்ள நான் முற்பட்டபோது 

ரோஜாவே என்னிடம் பேசத் தொடங்கியது. 

"பெண்ணே! நானும் நீயும் ஒன்றுதான், 

என்னை நீ அழகென்று ரசிக்கிறாய். 

ஆனால் என் ஒவ்வொரு இதழும் ஒரு முறை 

உதிர்ந்து அழிந்து தான் போகும்.

என் மேனி முழுவதும் உள்ள முட்கள் எனது பாதுகாப்பு வளையம், 

உன் வாழ்க்கையிலும் முட்கள் போன்ற வலிகள் வரலாம்; 

அவை உன்னை அழிக்க வந்தவை அல்ல, 

உன்னை வலிமைப்படுத்த வந்தவை.


என்னுடைய ஒவ்வொரு அழிவும் 

ஒரு முடிவல்ல,

அது ஒரு புதிய ஆரம்பம்.

நான் மீண்டும்  மீண்டும் மலர்வேன்.

நான் அழிந்தாலும் என் வாசம் என்னை விட்டு போவதில்லை,

நீயும் அப்படித்தான்!"

அந்த வார்த்தைகள் சத்தமில்லாமல் என்னுள் பதிந்தன,

நான் ரோஜாவை பார்த்தேன்

ரோஜா என்னை பார்த்தது 

அந்த நிமிடத்தில் நாங்கள் இருவரும் ஒரு உண்மையை மௌனமாக பகிர்ந்து கொண்டோம், 

"ஒவ்வொரு ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கிறது,

ஒவ்வொரு வலியிலும் ஒரு பாதுகாப்பு ஒளிந்திருக்கிறது."

அதை உணர்ந்த நொடியில், நான் என்னையே முழுவதுமாக மறந்தேன்.

ரோஜாவின் இதழ்களாகவும்,

அதன் வலிமையான முட்களாகவும் மாறிப் போனேன்.

அன்று முதல் ரோஜாவை பார்க்கும் போதெல்லாம் என்னை பார்க்கிறேன் 

உதிர்ந்தும் மலர தெரிந்த,

முட்களை கடந்தும் புன்னகைக்க தெரிந்த 

ஒரு பெண்ணை!


உதிர்வது வீழ்ச்சியல்ல,

மண்ணோடு மௌனமாய் உறவாடி

மீண்டும் மலர்வதற்கான தவம்!

முட்கள் தைக்கும் போது வலிக்கலாம்...

ஆனால் அதே முட்கள் தான்

நம்மை பாதுகாத்து

ஒரு பேரழகாய் நம்மை மாற்றுகிறது


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்