டெல்லி: காங்கிரஸ் கட்சி இந்திய இளைஞர்களுக்கு 5 உறுதிமொழிகளை இன்று அறிவித்தது. லோக்சபா தேர்தலையொட்டி இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. விரைவில் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய இளைஞர்களுக்காக 5 உறுதிமொழிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
2024ல் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் புதிய வேலைவாய்ப்பு புரட்சி தொடங்கப்படும். இன்று, நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்காக 5 முக்கிய அம்சங்கள் கொண்ட பெரும் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிடுகிறது.

1. பணி நியமன உத்தரவாதம்:
நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் பணி நியமனத்துக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். மத்திய அரசில் காலியாகவுள்ள ஏறத்தாழ 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வு முதல் பணி நியமனம் வரை காலக்கெடு தீர்மானிக்கப்படும்.
2. முதல் பணி உறுதி:
இளங்கலை பட்டம் பயின்றும் முறையான முன் பயிற்சி இல்லாததால், ஒவ்வொரு இரண்டாவது இளைஞரும் வேலை இல்லாமல் இருக்கிறார். 25 வயதுக்குட்பட்ட டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்ற ஒவ்வொருவருக்கும் தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் புதிய தொழில் பயிற்சி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்பதை காங்கிரஸ் கட்சி உறுதி அளிக்கிறது. பயிற்சி அளிக்கப்படும் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூபாய் 1 லட்சம் உதவி தொகையாக வழங்கப்படும். அதாவது மாதந்தோறும் ரூபாய் 8,500 வழங்கப்படும்.
3. தேர்வுத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி:
இன்று நாட்டில் பணி நியமனம் தொடர்பான ஆள்சேர்ப்பு நடவடிக்கை நடைபெற முடியாத அளவுக்கு சூழல் உள்ளது. தேர்வு எழுதினால் விடைத்தாள் காணாமல் போகிறது. விடைத்தாள்கள் சரியாக இருந்தால் வினாத்தாள் கசிய விடப்படுகிறது. கிராமங்களில் இருந்தும் சிறிய நகரங்களில் இருந்தும் பெரு நகரங்களுக்கு படிக்க வரும் நமது இளைஞர்களை கற்பனை செய்து பாருங்கள்.
தங்கள் குழந்தைகளுக்கு அரசு வேலை பெற்று தருவதற்காக வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தை பெற்றோர்கள் செலவு செய்கிறார்கள். புதிய சட்டம் கொண்டு வந்து கேள்வித்தாள் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை காங்கிரஸ் கட்சி உறுதி அளிக்கிறது.
தேர்வு நேர்மையான முறையில் நடைபெறும் என்பதை உறுதி செய்வோம். நமது இளைஞர்களின் பல ஆண்டு கடும் உழைப்பு வீணாகக் கூடாது.
4. சுதந்திரமான சந்தை பொருளாதாரத்துக்கான சமூக பாதுகாப்பு:
இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தின் போதும், இந்திய ஒற்றுமை நீதி நடைப் பயணத்தின் போதும் லட்சக்கணக்கான மக்களை ராகுல் காந்தி அவர்கள் சந்தித்தார். அவர்களில் சந்தைப் பொருளாதாரத்தில் அங்கம் வகிக்கும் லாரி ஓட்டுனர்கள், மெக்கானிக்குகள், தச்சர்கள், டெலிவரி செய்யும் இளைஞர்கள், டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்தார்.
தங்கள் கவலையையும் வலிகளையும் ராகுல் காந்தியிடம் பகிர்ந்து கொண்டனர். அதை அவர் கனிவுடன் கேட்டார். எவ்வளவு நாட்களாக இந்த பிரச்சினையை சந்திக்கிறீர்கள், எவ்வளவு சம்பளம் பெறுகிறீர்கள் போன்ற விவரங்களை கேட்டறிந்து, அவர்களது பிரச்சினையை புரிந்து கொண்டார். தங்கள் கிராமங்களில் இருந்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள நகரங்களில் வந்து பணியாற்றும் அவர்களது கடுமையான சூழ்நிலையை நாங்கள் உணர்கிறோம்.
இது போன்ற தொழிலாளர்கள் நலனுக்காக முந்தைய ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு சமூக பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது போல், நாங்களும் கொண்டு வருவோம் என்பதை காங்கிரஸ் கட்சி உறுதி அளிக்கிறது
சமூக பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையான புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளிக்கிறது. சுதந்திரமான சந்தைப் பொருளாதாரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களாக பணியாற்றும் கோடிக்கணக்கான இது போன்ற இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் இந்த சட்டம் பயன் தரும்.
5. இளைஞர்களுக்கான விடியல்:
இளைஞர்களுக்கான விடியல் திட்டத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூபாய் 5000 கோடி அளவுக்கு நிதி உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.
30 வயதுக்கு குறைவான இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க இந்த நிதி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு தொடங்கப்படும் சொந்தத் தொழில்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}