வயதானாலும் நாங்களும் நல்லுள்ளங்களே!

Apr 15, 2026,10:27 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


தாயவளுக்கு

வலியுணர்த்தி வையகத்தில் 

பெண்ணாக 

பிறந்து,


மழலையாக

மகுடம் சூட்டி

மனையில்

தாய்மடி தவழ்ந்து,


கண்ணியம்

கட்டுப்பாடென

முட்டிமோதி

முகம் மலர்ந்து,




பேதையிவள்

பேராசையாக கல்வியிலும்

கால்தடம் பதித்து,


பெதும்பை வயதில்

ஓடியாடி சந்தோசமாகத் திரிந்து,


மங்கையாக 

தேகத்தில் சில மாற்றங்களுடன் 

பூப்படைந்து,


மடந்தையிவள் மனதில்

காதலும்  காற்றாக நுழைந்து,


அரிவையென

அன்பையும்

அரவணைக்கும்

காதலனிடம்

விதைத்து,


தெரிவையாகவே

அவனை மணவறையில்

மனதார மணந்து,


மன்னவன் அவனின் 

ஆசைகளுக்கும்

ஆகினால் விருந்து,


பேரிளம் பெண்ணாக

பெற்றெடுத்தாள் குழந்தையை வியந்து,


குழவியைத் தந்தவனை

மண்ணுக்குள் அழைத்தது

கோரவிபத்து,


பிறந்தவைகளை வளர்க்க

இரவையும் இரவலாக்கினாள்

கண்விழித்து,


ஊனுறக்கம் இல்லாமல்

உடலும் போனது மெலிந்து,


குடும்பத்திற்காக வேலையும் பார்க்கணும் 

வளைந்து நெளிந்து,


வாழ்வில் வெற்றிக்காண

ஓடாய்த் தேயவேண்டும் ஆசைகள் துறந்து,


நித்தமும் நிம்மதியில்லாத

ஓட்டம் அதிகாலையிலே எழுந்து,


வீட்டு வேலைகளும்

விருப்போடு நோக்குமென்னை அகமகிழ்ந்து ,


உறவுகளையும் கவனித்தேன்

நேரத்தையும்

துச்சமாகக் கடந்து,


மிச்சமாக ஏதும் இல்லை

நோய்களைத் தவிர்ந்து ,


பட்டக்கடன் முடியவில்லை

படித்தே முடித்தார்கள் விரைந்து,


பிள்ளைகள் திறமையில்

குறைவில்லை விளங்குகிறார்கள் சிறந்து ,


விடியலென இணையர்களாக

இணைகிறார்கள்

இல்லம் நிறைத்து,


காலப்போக்கில் 

எங்களையும்

ஒதுக்குகிறார்கள்

மனம் வெறுத்து,


எப்போது திருந்துவார்கள்

தாய் தந்தையரின்

அருமையுணர்ந்து,


முதியோர் இல்லங்களையும்

கூட்டுகிறார்கள் 

பெற்றெடுத்ததை மறந்து...!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்