பிரதமர் மோடி இதைச் செய்ய வேண்டும்.. தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Jun 11, 2024,06:11 PM IST

சென்னை: மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சமூகநீதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மத்தியில் 3வது முறையாக ஆட்சியமைத்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


இந்தியாவின்  பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி  அவர்களுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.




உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான  இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அலங்கரிப்பது  எளிதான ஒன்றல்ல. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள்  மட்டும் தான் இதுவரை அப்பெருமையை பெற்றிருந்தார். எளிய குடும்பத்தில்  பிறந்த நரேந்திர மோடி அவர்கள், நேருவுக்கு அடுத்தபடியாக அந்த சாதனையை  படைத்துள்ள இரண்டாவது பிரதமர் ஆவார்.


இந்தியாவின் பிரதமராக இருமுறை பதவி வகித்த நரேந்திர மோடி அவர்கள், பொருளாதாரம் சார்ந்த பல்வேறு துறைகளில்  துணிச்சலான முடிவுகளை எடுத்திருக்கிறார். அதன் பயனாக உலகின் ஐந்தாவது  பொருளாதார வல்லரசு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அடுத்தக்கட்டமாக  அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பொருளாதார  வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது. இந்த இலக்கையும்  மோடி அவர்கள் நிச்சயம் வென்றெடுப்பார்.


தமிழ்நாடு எதிர்பார்க்கிறது


மூன்றாவது முறையாக தொடர்ந்து  பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து இந்த நாடு,  குறிப்பாக தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள்தொகை  கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள், மத்திய  அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும்  உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில்  மாநில ஒதுக்கீடு வழங்குதல்,  நீட் விலக்கு  உள்ளிட்ட மாநிலங்களின்   உரிமைகளை அதிகரித்தல் போன்றவை சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற  வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது.


இந்தக் கோரிக்கைகளை கண்டிப்பாக மத்திய  அரசு செய்யும் என்று நம்புகிறேன் என்று டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இடம் பெற்ற பாமக இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது. தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி ராமதாஸ் வெல்லும் நிலைக்கு வந்து மயிரிழையில் தோல்வியைத் தழுவினார் என்பது நினைவிருக்கலாம். ஒருவேளை செளமியா அன்புமணி வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் மத்திய அமைச்சராகியிருக்கக் கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்