சென்னை: பாஜக கூட்டணியிலிருந்து விலகி, மறைந்த ஜெயலலிதா செய்த செயல் வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், ஜெயலலிதாவால், சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட கடம்பூர் ராஜுவின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை. மோடியா, இந்த லேடியா பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அதிமுக வெல்லக் காரணமாக இருந்தார் ஜெயலலிதா என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பாஜக நட்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றை உதறத் தயாராகி விட்டார் ஓ.பி.எஸ். என்று தெரிகிறது. அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்குப் போகக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதை சூசகமாக உணர்த்தும் வகையில் தவெகவின் கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரிகளான திமுக மற்றும் பாஜகவை குறிவைத்து அடுத்தடுத்து அறிக்கைகளை விடுத்து வருகிறார் ஓ.பி.எஸ்.
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை பாஜக தரப்பை கடும் அதிருப்திக்குள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. ஜெயலலிதா குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசிய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை விடுத்துள்ளார் ஓ.பி.எஸ். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பின் நான்கு முறை, அதாவது இருபது ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்த்திய பெருமையும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் “இரட்டை இலை” சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.
இப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உச்ச நிலைக்கு அழைத்துச் சென்ற மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்லும் விதமாக "பாஜக கூட்டணி முறிவு" என்ற வரலாற்று பிழையை மாண்புமிகு அம்மா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நலன் கருதி மாண்புமிகு அம்மா அவர்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால்தான். 2001 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்கள். இந்த
வரலாறு தெரியாமல் திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மாண்புமிகு அம்மா அவர்கள் செய்தது வரலாற்றுப் பிழை அல்ல. அது ஒரு வரலாற்றுப் புரட்சி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தது. ஆனால், மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக்கப்பட்ட, அமைச்சராக்கப்பட்ட திரு. கடம்பூர் ராஜு அவர்களின் பேச்சுதான் வரலாற்றுப் பிழை.
“மோடியா, இந்த லேடியா” பார்த்துவிடலாம் என்று சவால்விட்டு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற காரணமாக இருந்த மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் குறை சொல்வதைப் பார்க்கும்போது “வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களை குறை சொல்வது என்பது “உண்ட வீட்டுக்கு இரண்டகம்" செய்வதைப் போன்றது.
“ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது” மிகப் பெரிய துரோகம் என்பதை உணர்ந்து, தான் செய்த செயலுக்கு திரு. கடம்பூர் ராஜூ அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில்,இதற்குத் தக்க பாடத்தினை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}