Grey Divorce on rise: ஐம்பது வயதில் ஆசை மட்டுமில்லீங்க.. இப்பெல்லம் டைவர்ஸும் வருது!

May 29, 2025,01:39 PM IST

தென்றல்


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாய் நம்பிக்கை. ஒருவேளை, பொருத்தமில்லாத திருமணங்கள் நரகத்தில் நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றனவோ? எங்கே நிச்சயிக்கப்பட்டாலும் இன்றைக்குப் பல திருமணங்கள் நீதிமன்றத்தில் போய் முடிகின்றன.. முறிகின்றன. அதிலும் இந்தியாவில், தமிழ்நாட்டிலும் பரவலாக ட்ரெண்டாகிக் கொண்டிருப்பது மூத்த தம்பதியர் விவாகரத்து! 


மணம் முடித்து பல ஆண்டு காலம் இணைந்து வாழ்ந்த தம்பதியர் பிரிவதை,  மூத்த தம்பதியர் விவாகரத்து, நரை மணமுறிவு (Grey Divorce) என்று சொல்கிறார்கள். பல பிரபலங்களின் இவ்வகை விவாகரத்துக்கள் வெட்ட வெளிச்சமாகிப் பேசு பொருளாக, சமூகத்தின் மற்ற தரப்பிலும் மெதுவாக இது அதிகரிப்பதைக் காண முடிகிறது. 


திருமணமாகி சில ஆண்டுகள் வாழ்ந்த இளம் தம்பதியரின் மணமுறிவு தமிழ் மண்ணிலும் இயல்பான சகஜமான ஒன்றாகிவிட்டது.  பிடிக்கவில்லை, பொருத்தமில்லை, ஒழுக்கமில்லை, ஒத்துப்போகவில்லை என்பது துவங்கி நியாயமான, நியாயமற்ற காரணங்கள் பல! எல்லாவற்றோடு இளைய சமுதாயத்திற்குப் பொறுமையில்லை, சகிப்புத்தன்மையில்லை! என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.


சரி.. ஆனால், மணமுடித்து பத்து, இருபது வருடங்களுக்கு மேல் இணைந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி.. (சிலர் பிள்ளைகளுக்கும் மணமுடித்துவிட்டு) பல சுக துக்கங்களைப் பார்த்துவிட்ட மூத்த தம்பதியருக்கு என்னவாகிறது? விட்டால் போதுமென இவர்கள் ஏன் விவாகரத்தை நோக்கிச் செல்கிறார்கள்? 




இவர்களின் ஆயிரம் காலத்துப் பயிரில், களைச்செடிகள் பல காலமாய் முளைத்துக் கிடக்கின்றனவோ? அல்லது வருடக்கணக்கில் புகைந்து கொண்டிருந்த நெருப்பு (வெறுப்பு) பற்றி கொள்கிறதோ? ஒருவேளை, ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தவர்கள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைக்கிறார்களோ?


எல்லா காலங்களிலும் பொருத்தமில்லாத, குடும்ப வன்முறை நிறைந்த மோசமான திருமண வாழ்க்கைகள் இருந்தன. திருமணத்திற்கு வெளியே தவறான உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு அதனால் தன் வாழ்க்கைத் துணையுடன் சிக்கலை உண்டாக்கிக் கொண்ட ஆண்களும் பெண்களும் வாழ்ந்தார்கள். எண்பது வயதிலும் தாத்தா, பத்து பிள்ளைகளைப் பெற்று தந்த பாட்டியை  அடித்துச் சண்டையிட்டு வாழ்ந்து மறித்துப் போன எண்ணற்ற கதைகள் உண்டு. 


கழுத்தை நெரித்த மூச்சு முட்ட வைத்த உறவுகளில் கூட, பெற்ற பிள்ளைகளுக்காகப் பெண்கள் வாழ்ந்தார்கள்! பிடிக்காத மனைவியையும் ஆண்கள் பிடிவாதமாய்ப் பிடித்திருந்தார்கள்!


குடிகார புருஷனையும் வேறு வழியின்றி சகித்துக் கொண்ட பெண்கள் ஏராளம்! மனதளவில் விரிசல் விழுந்துவிட பெயரளவில் வாழ்ந்துவிட்டுப் போன ஆண்களும் ஏராளம்!


வளர்ந்த பிள்ளைகளை வேலையில் அமர்த்தித்  திருமணம் முடித்துக் கொடுத்த பின்னும்  தம்பதியர், சம்மந்தி வீடு, பிள்ளைகளின் மரியாதை, சமுதாயம் என்று பல கட்டுக்களுக்கு பயந்தார்கள்.    


வாழ்நாள் கைதிகளாய் அப்படியே வாழ்ந்து சாகுங்கள்! என்று உறவுகளும் சமுதாயமும் இவர்களுக்கு அழுத்தம் கொடுத்தன! இந்தக் காற்றாடி உறவை தாங்கி நிற்கும் நூலாக இவர்களின் பிள்ளைகள் இருந்தார்கள். தம்பதியர் தங்கள் வாழ்வை விலையாகக் கொடுத்துப் பல தியாகங்களைச் செய்து திருமண உறவை வாழவைத்தார்கள்!


இன்றைக்கு என்னவாயிற்று? காலம் மாறிவிட்டது! அவ்வளவு தான்!


மோசமான திருமண உறவில் இயந்திரமாய் வாழ்ந்த பெண்கள், கல்வி, வேலை, பொருளாதார பலம் தைரியம் கொடுக்க, காலம் கடந்தாவது சுதந்திரமாய் வாழ நினைக்கிறார்கள்.


குடும்ப வன்முறையில் சிக்கித் தவித்த பெண்கள் ஒரு கட்டத்தில், போதும்! போதும்! இந்தத் திருமணச் சிறையில் இனியும் செக்கிழுத்துச் சாகவேண்டாமென முடிவெடுத்துவிடுகிறார்கள்.


திருமண வாழ்வில் அவதியுற்ற ஆண்கள், என்னை விட்டுவிடம்மா தாயே! என்று இதிலிருந்து வெளியேறினால் போதுமென நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள். உறவில் வெறுமை நிறைந்துவிட, பிள்ளைகள் விலகிச் சென்றுவிட, மனைவியின் மீது மனது கசந்து விட , வேறு துணையுடனோ அல்லாமலோ, ஆண்களும் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகருகிறார்கள்.


மருத்துவ வசதிகள் முன்னேறி மனிதர்களின் ஆயுட்காலம் நீடித்திருக்க, பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்திவிட்டு, கடந்த காலத்தில் தொலைத்த விஷயங்களை, நட்புகள், பிடித்த பொழுதுபோக்கு என அனுபவித்து மீதமுள்ள வாழ்கையைத் தங்கள் இஷ்டப்படி கழிக்க மூத்த தம்பதியர் விரும்புகின்றனர்.


வளரும் பிள்ளைகளும் தங்களைச் சுற்றி விவகாரத்துக்களைப் பார்த்து வளரும் நிலையில், இன்றைக்குப் பல பிள்ளைகள் இதை சகஜமாய் ஏற்றுக்கொள்கிறார்கள்.


இளையவர்கள் போல அவசரகதியில், எடுத்தேன், கவிழ்த்தேன்! என்று சட்டென்று எடுக்கப்படும் முடிவல்ல இவை. மாறாக, நின்று, நிதானித்து பல காலம் யோசித்து, நரகத்திலிருந்து வெளியேறும் திறவுகோலாகவே இருக்கின்றது. உறவிலிருந்து வெளியேற வழி தெரியாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டு, சளித்துப் போய்விட்ட உறவில் தன் மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க இன்று மனிதர்கள் தயாராக இல்லை.  இவையெல்லாம் சரியா தவறா என்ற வாக்கு வாதத்திற்கு அப்பால்  இந்தத் தொழிநுட்ப உலகம் நம்மை இழுத்துச் செல்கிறது. 


பொறுத்தார் பூமியாள்வார் என்றாலும் இந்த வேகமான உலகில், பொறுமையின் எல்லையை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நவீன யுகத்தில் இவையெல்லாம் தவிர்க்க முடியாத மாற்றங்களாகவே இருக்கும். ஆணாயினும் பெண்ணாயினும், தன்மானமும் சுயமரியாதையும் அடகு வைக்கப்பட்டு, திருமண உறவில் வெறுப்பு மட்டுமே மிஞ்சியிருக்குமானால், கால தாமதமானாலும் அந்த உறவிலிருந்து விடுபடுவது சரியான முடிவாகவே.. இல்லை.. இல்லை.. மற்றொரு நல்ல துவக்கமாகவும் அமையக்கூடும்.


ஐம்பதிலும் ஆசை வரும்.. ஆசையுடன் பாசம் வரும்.. அப்படின்னு ஒரு பழைய பாட்டு இருக்கு.. நிஜமும் கூட.. ஆனால் இப்பெல்லாம் கூடவே டைவர்ஸும் வர ஆரம்பிச்சிருக்கு.. இந்தப் போக்கு எப்படிப் போகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


(தென்றல் தொடர்ந்து வீசும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்