தவெகவில் இணைந்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரன்

Jun 19, 2026,10:29 AM IST

சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகத்தில்' (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.


பனையூர் அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழா:

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (18.06.2026) இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில், சி.மகேந்திரன் தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நீண்ட காலமாக இடதுசாரி சிந்தாந்தவாதியாகவும், மக்கள் நலப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற ஒரு மூத்த தலைவர் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.


"சிவப்பு துண்டோடு தவெகவில் செயல்படுவேன்" 




கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன், தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் தவெகவின் கொள்கைகள் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், "நான் எனது அடையாளமான சிவப்பு துண்டோடு தான் தவெகவில் செயல்பட விரும்புகிறேன். தமிழக வெற்றிக் கழகமானது சாதியைக் கடந்து ஒரு பெரும் வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்மைக்காலத் தேர்தலில் சாதி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளதை தமிழக அரசியலில் நான் பெரும் வியப்புடன் பார்க்கிறேன். சாதி ஒழிப்பிலும், மக்கள் நலனிலும் தவெக கொண்டுள்ள அக்கறையே என்னை இந்த இயக்கத்தை நோக்கி ஈர்த்துள்ளது."


அரசியல் முக்கியத்துவம் :

நடிகர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றதில் இருந்தே, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முகமான சி.மகேந்திரன் தவெகவில் இணைந்திருப்பது, கட்சியின் இடதுசாரி மற்றும் முற்போக்குக் கொள்கைகளுக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


சாதி மற்றும் மதவாத அரசியலுக்கு எதிராகத் தவெக எடுத்து வரும் நகர்வுகள், முதிர்ந்த அரசியல் தலைவர்களையும் தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கியுள்ளதை இந்த நிகழ்வு காட்டுகிறது. வரும் காலங்களில் சி.மகேந்திரனின் அனுபவம் தவெகவின் கொள்கை உருவாக்கத்திற்கும், களப்பணிகளுக்கும் பெரும் பலமாக இருக்கும் என தவெகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்