இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

Jun 21, 2025,07:00 PM IST
- முனைவர் ராணி சக்கரவர்த்தி

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து குடும்பப் பொறுப்புகளை மட்டும் கவனித்துக் கொள்ளும் பெண்களை, இல்லத்தரசிகள், இல்லறம் செய்பவர்கள் என்கிறது நமது சமுதாயம். உண்மையில் இந்தப் பெண்கள் வீட்டின் எஜமானிகளாகவும், இல்லத்தின் அரிசிகளாகவும் மதிக்கப்படுகிறார்களா என கேட்டால், பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் வரும்.

2023 ஆம் ஆண்டு கணக்குப்படி, நமது இந்திய தேசத்தில், உழைக்கும் வயதில் இருக்கும் பெண்களில், 32 சதவீதம் தான், பணிபுரியும் பெண்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள 68 சதவீத பெண்கள் இல்லத்தரசிகளாக இருக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களை விட இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் ஓய்வாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஒரு பொதுக் கருத்து நிலவுகிறது. ஆனால் இது உண்மை நிலவரம் அல்ல.

கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான ஒட்டு மொத்த தற்கொலை எண்ணிக்கையான 1,53,052ல் 14.6% இல்லத்தரசிகளின் தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின் படி 22,372 இல்லத்தரசிகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 61 பேரும் 25 நிமிடங்களுக்கு ஒரு இல்லத்தரசியும், தற்கொலை செய்து கொள்கின்றனர். பணிக்குச் செல்லும் பெண்களை விட இல்லத்தரசிகள், அதிகமான மனச்சோர்வு, மன எழுச்சி, மனச்சிதைவு போன்ற மன நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. இரட்டை பனிச்சுமை இல்லாமல் வீட்டில் ஓய்வாக இருக்கும் இந்த இல்லத்தரசிகள், ஏன் தற்கொலை எண்ணத்திற்கும், மனநோய்க்கும் ஆளாகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை நிலை புலப்படும்.

அங்கீகாரம் 



அதிகாலை முதல், நடுநிசி வரை, வீட்டின் அனைத்து வேலைகளையும் ஓய்வின்றி செய்தாலும், அந்த வேலைகளுக்கு அங்கீகாரமோ, முக்கியத்துவமோ, இல்லத்தரசிகளுக்குக் கிடைப்பதில்லை. தங்களை சம்பளம் இல்லாப் பணியாளாகத்தான் பல இல்லத்தரசிகள் உணர்கிறார்கள். வீட்டில் சும்மா தான் இருக்க என்று சொல்ல கேட்கும் போது, நான் என்ன வீட்டில் சும்மாவா இருக்கேன் என மனம் கொந்தளிக்கிறது. பல குடும்பங்களில், சம்பாதிக்கும் பெண்களுக்கு இருக்கும் அங்கீகாரம், இல்லத்தரசிகளுக்கு இருப்பதில்லை. சம்பாதிக்கும் மருமகளுக்கு, மாமியார் வீட்டில் என்றும் தனி மரியாதை இருக்கும். தன் படிப்பையும், வருமானத்தையும், கனவையும், குடும்ப நலனுக்காகத் தியாகம் செய்த பெண்ணுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்காத போது, அவள் மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.

குடும்பப் பிரச்சனைகள் 

அனைத்துப் பெண்களுக்கும் குடும்ப பிரச்சினைகளும், திருமணம் தொடர்பான பிரச்சனைகளும் இருந்தாலும், பணிக்குச் செல்லும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும், குடும்பப் பிரச்சினைகளை மறக்க, வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாலும், தனது சிந்தனையை, குடும்பப் பிரச்சினையிலிருந்து அலுவலகப் பணிக்கு திருப்பி விடுவதாலும், அவர்களின் மன அழுத்தம் குறைகிறது. ஆனால் இல்லத்தரசிகளுக்கு மாற்றுச் சிந்தனைகள் இல்லாததால், குடும்பப் பிரச்சினைகளைப் பற்றியே சிந்தித்து, அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். வீட்டிலேயே இருப்பதால் தங்களின் பிரச்சனைகளை யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. வெளி உலக அனுபவம் இல்லாததால், குடும்ப பிரச்சினைகளைத் திறம்பட சமாளிக்க முடியாமலும் போய்விடுகிறது. குடும்பத்தார் மீது கோபப்படுவதும், கத்துவதும், அடிக்கடி அழுவதும் இதன் வெளிப்பாடுதான். இன்னும் நமது கிராமங்களில் 18 வயதிற்கு முன்னதாகவே திருமணம் செய்து வைப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சிறு வயதிலேயே ஒரு மனைவியாக, மருமகளாக, முழு குடும்ப பொறுப்புகளையும் தலையில் சுமப்பது, பெண்ணை சோர்வடையச் செய்கிறது. பிறந்த வீட்டின் கட்டுப்பாடுகள் அவளை மேலும் திணறடிக்கிறது.

சுதந்திரம் 

படித்த பெண்ணாக இருந்தாலுஙம், வசதியான பெண்ணாக இருந்தாலும், அவர்கள் இல்லத்தரசிகளாக இருந்தால், தன் தேவைகளுக்குக் குடும்பத்தாரையே சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த பொருளாதார சார்பு நிலை, அவர்களுக்கு அடிமை போன்ற உணர்வைத் தருகிறது. வேலைக்கு செல்லும் பெண்களை ஒப்பிடும்போது இல்லத்தரசிகளுக்கு, தனித்தியங்கும் சுதந்திரம் குறைவாகவே உள்ளது. எல்லாவற்றையும் கணவரின் அனுமதி பெற்று செய்ய வேண்டும் என்ற நிலை, அவர்களை அதிகம் சலிப்படையச் செய்கிறது. தன்னுடைய படிப்பும் திறமையும் வீணாக்கப்பட்டதை போல் உணர்வார்கள். தன்னால் யாருக்கும் பயனில்லை என்று எண்ணம் வரும்பொழுது, தற்கொலை எண்ணங்கள் தலைதூக்குகிறது.

ஒரு தாய் தன்னுடைய எட்டு வயது மகனை என்னிடம் அழைத்து வந்தார்.  அவன் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுவதாகவும், என்ன முயற்சி செய்தாலும் அந்த பழக்கம் மாறவில்லை என கூறி வருத்தப்பட்டார், அந்த குழந்தையைத் தனியாக அழைத்துப் பேசினேன். அவனுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்ன? என்று பேசிக்கொண்டு இருக்கும்போது, உன் அம்மாவிடம் உனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? எனக் கேட்டேன். அவன் உடனே, எங்க அம்மா நல்ல சமைச்சுத் தருவாங்க, அன்பா பாத்துக்குவாங்க, அது பிடிக்கும். ஆனா சாயங்காலம் படிக்கும் போது ரொம்ப அடிப்பாங்க அது பிடிக்காது என்றான். மேலும் எனக்கு மாலையில் வீட்டுக்கு வரவே பயமாயிருக்கும், எனக்கு விளையாடப் பிடிக்கும், ஆனால் என் அம்மா வெளியே விளையாட விட மாட்டார் என்று பாவமாக கூறினான்.

பிரச்சனையின் ஆணிவேரை கண்டுபிடித்த சந்தோசத்தில், அவரின் தாயை அழைத்துப் பேசினேன். அவரிடம் பேசிய பிறகுதான் அதிக பனிச்சுமையின் காரணத்தினால், அவர் தீவிர மன அழுத்தத்தில் இருப்பதும், அந்த மன அழுத்தத்தைத் தன் மகன் மீது வெளிப்படுத்துவதும் புரிந்தது. அவளின் கணவர் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் பழக்கம் உடையவர். தன் மகன் அதிக மதிப்பெண் எடுக்காததற்கு, இவள் அவனைச் சரிவர கவனிக்காததே காரணம் என்று அடிக்கடி சொல்லுவாராம், வீட்டில் சும்மாதானே இருக்கிறாய், இந்த வேலையை யாவது ஒழுங்காகச் செய்தால் என்ன? எனக் கேட்டதால், தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் மகனின் மீது காட்டி இருக்கிறாள். இது அவளின் மகனுக்கு படிப்பை பற்றியும் அம்மாவை பற்றியுமான பயத்தை அடி மனதில் பதிய வைத்து விட்டது. இந்த பயமே அவனின் பிரச்சனைக்குக் காரணம் என்பதை அவன் தாய்க்கு உணர்த்தினேன். அவளின் கோபம் நியாயமானதாக இருந்தாலும், அதைக் கையாளும் முறை தவறாக இருந்ததை அவள் புரிந்து கொண்டாள்.

அவளின் மன அழுத்தத்தைக் குறைக்க, அவள் விரும்பிய அழகுக் கலைப் பயிற்சிக்குச் செல்லப் பரிந்துரை செய்தேன். இந்தச் சூழலை, நாம் பல குடும்பங்களில் பார்க்கலாம். தாயின் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. கணவன் மனைவி இடையிலும் அதிக பிரச்சனைகள் வருவதற்கு இந்த மனச்சோர்வு காரணமாக அமைகிறது.

இனிய இல்லத்தரசியே,

வீட்டையும், குடும்பத்தினரையும் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ளும் அதே வேலளயில், உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். வீடு அழகாக இருப்பதைவிட உங்களின் ஆரோக்கியமும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீட்டு வேலைகளை திட்டமிட்டு செய்து, உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க, சில பொழுதுபோக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். அது கண்டிப்பாக, தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதாக இருக்க வேண்டாம். உங்களைப் புதுப்பித்துக் கொள்ள, ஏதாவது ஒன்றைப் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். வெளியில் வேலைக்குச் செல்ல வாய்ப்பு இல்லாவிட்டால், வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் செய்ய முற்படுங்கள்.

சமூக சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களின் திறமைகளைக் கண்டறிந்து, அதை உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக, அங்கீகாரத்திற்காகப் பயன்படுத்துங்கள். பொருளாதார சுதந்திரமும், முறையான அங்கீகாரமும், உங்கள் ஆளுமையை மேம்படுத்தும். உங்களின் தேவையை, மனநிலையை குடும்பத்தாரிடம், தெளிவாகச் சொல்லிப் புரிய வையுங்கள். உங்கள் தியாகத்திற்கு பைத்தியக்காரி என்ற பட்டம் வாங்காமல் இருக்க, உங்களின் மன நலனை பாதுகாத்துக் கொள்வது அவசியம். வாழ்க்கை ஒருமுறைதான்,  பெண்ணாகப் பிறந்தால் கூண்டுக்கிளி போல அடைபட்டு, வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாமல், வாழ்க்கையை ரசித்து வாழப் பழகுங்கள். உண்மையில் நீங்கள் உங்கள் இல்லத்தில் அரசியாக இருப்பீர்கள்.

கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.செய்தி விளக்கத்தை உள்ளிடவும்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

news

இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

முக ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது... நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்