சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்

Oct 22, 2025,05:01 PM IST

சென்னை: திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில் சென்ற தேர்தலில் மூன்று தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஒதுக்கித் தந்தார்கள். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக் கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா - இலங்கை மீனவர் கழகம் என்ற அமைப்பை தொடங்கவேண்டும் என இலங்கை பிரதமர்  ஹரிணி அமர சூர்யவிடம்  வலியுறுத்தினோம். தகைசால் விருது வழங்கிய முதல்வருக்கு நன்றி. தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்துகொண்டு திராவிட மாடல் நல்லாட்சியை நடத்தி வரும் நமது முதலமைச்சரின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு இந்த எளியவனுக்கு தகைசால் தமிழர் எனும் உயரிய விருதை வழங்கி கண்ணியப்படுத்தியுள்ளது. அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை கடமை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி தமிழ் நாட்டின் அரசியல் களத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பலதரப்பட்ட அரசியல் வியூகங்களும், யூகங்களும், எதிர் பார்ப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணமாகவும் இருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் திராவிட மாடல் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிறைவாக உள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் திராவிட மாடல் மக்களாட்சியைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அரசு செய்த, செய்து கொண்டிருக்கிற சேவைகளை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டிருப்பதை - குறிப்பாக மகளிர் சமூகம் அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசின் பல்வேறு திட்டங்களை ஏற்றுக் கொண்டிருப்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமைகளான திராவிட மாடல் அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கைதான் மாநிலம் முழுக்க மக்களிடத்திலே நிறைவாக இருந்து கொண்டிருக்கிறது.




தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அன்று இருந்தது போல், இன்று இருப்பது போல், வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து அப்படியே இருக்கும். இதில் எங்களுக்கு சிறிதளவும் சந்தேகம் வரவில்லை. அரசியலில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன என்றாலும், அடுத்து வரவிருக்கக் கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலைப் பொருத்த வரை, திராவிட மாடல் மக்களாட்சியை தமிழ்நாட்டில் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசு தொடரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வலுவாக உள்ளது. அந்த அடிப்படையில்தான் எங்களது களப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.


சிராஜுல் மில்லத் அவர்களது நூற்றாண்டு விழாவை இம்மாதம் 26ஆம் நாளன்று தலைநகர் சென்னையில் பெரியார் திடலில் - எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து, விமரிசையாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், வரும் டிசம்பர் 28ஆம் நாளன்று கும்பகோணத்தில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். அதில் நமது முதலமைச்சர் அவர்களையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறோம். விரைவில் இசைவு தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.


நாங்கள் எங்களது இலங்கை பயணத்தில் அந்நாட்டின் பிரதமர் ஹரிணி அவர்களைச் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். மிக முக்கியமாக, தமிழ்நாட்டின் மீனவர் நலனை முன்வைத்து முக்கியமான கோரிக்கைகளை அவர்களிடத்தில் முன் வைத்திருக்கிறோம். தமிழ்நாடும், இலங்கையும் இருவேறு பகுதிகளாக நினைத்து நாம் வாழ்ந்து விடக்கூடாது. இந்தியாவும் - இலங்கையும் ஒருதாய் மக்கள் என்ற நினைவோடுதான் நாம் இருக்க வேண்டும். அண்டை நாடுகளாகிய நாம் அண்டை நாடுகளாகவே எப்பொழுதும் இருக்கக் கூடியவர்கள். அது ஒருபோதும் மாறப் போவதில்லை. அண்டை நாடுகளாக உள்ளவர்களிடையிலே பிணக்கும், பகைமையும் ஒரு காலத்திலும் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. அண்டை நாடுகள் தமக்கிடையில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அடிக்கடி சொல்வார். அதை இந்தத் தருணத்தில் நான் நினைவுகூர விரும்புகிறேன்.


இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு வரலாற்றுப் பூர்வமானது மட்டுமல்ல; இது காலத்துக்கும் தொடர்ந்து நீடிக்க வேண்டிய வலுவான தொடர்பு. இரண்டு நாட்டு மக்களுக்கிடையேயும் நல்லெண்ணமும், சுமுக நிலையும், நட்புறவும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்திய அரசும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவு என்றென்றைக்கும் பழுதில்லாமல் பக்குவமாகத் தொடர வேண்டும் என்று நாங்கள் இலங்கை பிரதமர் ஹரிணி அம்மையார் அவர்களிடம் சொன்னோம். அவரும் அதை மனதார ஏற்றுக்கொண்டார். அடுத்து, தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சினை இன்று நேற்றல்ல; தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர முடிவு கட்டும் வகையில் நீங்கள் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அந்த அம்மையாரிடத்தில் நாங்கள் முறையிட்டோம்.


தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களும், யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்களும் தமிழ் மொழியைப் பேசும் மக்கள்தான். இப்படியான மீனவர்களுக்கிடையிலே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுவதும், அவர்களது படகுகளைக் கைப்பற்றுவதும், அந்த மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும் இரு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இருநாட்டு மீனவர்களுக்கிடையேயும் நல்லுறவும், நல்லிணக்கமும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நல்லிணக்கத்தை நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசு மனமுவந்து உட்பட வேண்டும் என்றும் நாங்கள் அம்மையாரிடம் சொன்னோம். அதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.


அதுபோல, தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களும் சரி; இலங்கையில் உள்ள மீனவர்களும் சரி; இருநாட்டு மீனவர்களுமே தனது வாழ்வாதாரத் தேவைக்காகத்தான் மீன்பிடித் தொழிலைச் செய்து வருகின்றனர். அப்படியான இந்த இருநாட்டு மீனவர்களையும் ஒன்றிணைத்து, இந்திய இலங்கை மீனவர் கழகம் என்று ஓர் அமைப்பைத் தொடங்கி, அதில் கச்சத்தீவை அடித்தளமாகக் கொண்டு - இருநாட்டு மீனவர்களையும் இணைத்துக் கொண்டால், அவர்களுக்கிடையே நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அதன் மூலம் தீர்வு கிடைக்கும். இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பிரச்சனையும் இருக்காது. ஒற்றுமையாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து, உலகம் முழுக்க விற்பனை செய்வார்கள். அதனால் வரும் ஆதாயத்தை ஆரோக்கியமான முறையில் பங்கு போட்டுக் கொள்வார்கள். இதற்காக மேற்படி அமைப்பைத் தொடங்குவது காலத்தால் மிகவும் அவசியமானதாக இருக்கிறது என்றும் நாங்கள் இலங்கை பிரதமர் அம்மையார் அவர்களிடம் எங்கள் சிந்தனையில் உதித்த புதிய கோரிக்கையாக வைத்தோம். 


திமுக தலைமையிலான கூட்டணியில் இன்று நேற்றல்ல; கலைஞர் அவர்களது காலத்தில் இருந்தே நாங்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் இருந்தார்களா, இல்லையா; நாளை அவர்கள் இருப்பார்களா, இல்லையா என்ற விவாதம் எங்களுக்கு அவசியமற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்த வரை நாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் அன்றும் இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; நாளையும் இருப்போம்.  ஏன் இந்த அளவுக்கு நான் சொல்கின்றேன் என்றால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்றக் கழகத்து டன் கொண்டுள்ள கூட்டணி என்பது தேர்தலை மட்டும் மையப்படுத்தியது அல்ல. இது ஒரு கொள்கை அடிப்படையிலான கூட்டணி. திமுகவின் திராவிட அடிப்படைக் கொள்கைகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பின்பற்றும் இஸ்லாமின் அடிப்படைக் கொள்கைகளும் சற்றொப்ப ஒன்றாகவே இருக்கின்ற காரணத்தால், நாங்கள் இந்தக் கூட்டணியில் நல்ல உறவுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். எனவேதான் தேர்தல் காலமாக இருந்தாலும் சரி; இதர தருணங் களாக இருந்தாலும் சரி; இதை நாங்கள் வெளிப்படையாகவே தொடர்ந்து சொல்லி வருகிறோம்.




திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில் சென்ற தேர்தலில் மூன்று தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு ஒதுக்கித் தந்தார்கள். இப்பொழுது தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடவடிக்கைகள், அதன் அங்கத்தினரது எதிர்பார்ப்புகள், அது தொடர்பாக தொடர்ந்து வரும் தகவல்கள், எங்கள் மாவட்ட நிர்வாகங்களின் தீர்மானங்கள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கு குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக் கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்குத் தோதுவாக பொதுவான கருத்துகள் எங்களுக்கு வந்திருக்கின்றன.


ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு அரசு மிகத் தெளிவாகவே கூறிவிட்டது. அப்படி ஏற்றுக் கொண்டால், தமிழ்நாட்டில் பாரம்பரியமாகப் பின்பற் றப்பட்டு வரும் கல்விக் கொள்கை முறை அடிபட்டுப் போகும். தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை என்ன என்பது ஊருக்கும், உலகுக்கும் தெளிவாகத் தெரிந்தது. தமிழும், ஆங்கிலமும் இருக்கும் வகையில் என் மாநிலத்தின் கல்விக் கொள்கை தொடர்பான சட்டதிட்டங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.


மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என தொடர்ந்து இவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்தும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உடன்படாது என்று தெளிவாகவே நாம் சொல்லி இருக்கிறோம். நமக்காக தமிழ்நாடு அரசு இது தொடர்பில் மிகத் தெளிவாக தனது மறுப்பைச் சொல்லி இருக்கிறது.  ஆக, கேரளாவில் அப்படிச் சொல்கிறார்கள் என்றால், அது அந்த மாநிலத்தின் கொள்கை முடிவு. தமிழ்நாட்டைப் பொருத்த வரை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அரசின் சார்பில் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றனர் அது குறித்த செய்திகளையும் நீங்கள்தான் ஊடகத்தில் விரிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.


தேர்தல் என்பதே சவால்தானே? ஒரு கூட்டணியில் கட்சிகள் அதிகமாகச் சேரும்போது அந்த சவால் கூடத்தானே செய்யும்?  தமிழக வெற்றி கழகம் என்று கூறுகிறார்களே அந்தக் கட்சி இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. இப்பொழுதுதான் கட்சி தொடங்கப்பட்டு, முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. அதன் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் நிறைய மக்கள் கூட்டம் சேர்கிறது. அண்மையில் கரூரில் நடந்த நிகழ்வு உங்களுக்குத் தெரியும். ஆக, கூட்டங்கள் சேர்வதை வைத்தெல்லாம் தேர்தல் வெற்றியைக் கணக்கெடுத்து விட முடியாது. அறிஞர் அண்ணா அவர்களது காலத்திலும், காமராஜர் அவர்களது காலத்திலும், கலைஞர் அவர்களது காலத்திலும் மக்கள் கூட்டம் நிறைய சேரத்தான் செய்தன. ஆனால் அவற்றை வைத்தெல்லாம் தேர்தல் வெற்றியைக் கணித்து விட முடியாது என்று அந்தக் காலத்திலேயே சொல்வார்கள் அல்லவா? எனவே, தேர்தல் என்பது வேறு; பொது நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டம் என்பது வேறு. கூட்டங்கள் சேருவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதே காரணம் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் முடிவைப் பொருத்த வரை மக்கள்தான் எஜமானர்கள் . அவர்கள் யாரை விரும்பித் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியைப் பெறுவார்கள். 


எம்ஜிஆர் இடத்தில் முன்பு நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது கூட, ""பாய் தேர்தல் முடிவை யெல்லாம் இப்பொழுதே சொல்லிவிட முடியாது... அதை தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய - பரப்புரைகள் முடிவுற்ற அந்த கடைசி மூன்று நாட்கள்தான் முடிவு செய்யும்"" என்று அவர் கூறுவார். இறைவன் தான் விரும்பியோருக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பான், விரும்பாதவர்களிடமிருந்து அதைப் பிடுங்கி விடுவான்"" என்று ஆன்மிகத் தத்துவம் கூறுவார்கள். அந்த ஆன்மிகத்தை இறைவனை யார் நம்புகிறார்களோ, இல்லையோ - நான் நம்புகிறேன். இறைவன் நாடியதுதான் நடக்கும். எனவே அரசியலில் அப்படி இப்படி என ஆயிரம் நிகழ்வுகள் நடக்கத்தான் போகின்றன. அரசியலே ஒரு மிகப்பெரிய சவால்தான் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம்: கே.எம். காதர் மொகிதீன்

news

சிறப்புக் குழந்தைகளின் செல்லம்.. வசந்தா செல்வகுமாரி.. வியக்க வைக்கும் பெண்மணி!

news

டாடாவின் புதிய சாதனை: ஒரே மாதத்தில் ஒரு லட்சம் கார்கள் விற்பனை!

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

news

இலங்கையில் பரபரப்பு.. கட்சி அலுவலகத்தில் வைத்து.. எதிர்க்கட்சி பிரமுகர் சுடப்பட்டார்!

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

news

குருவிக்கூடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்