48 மணி நேரததிற்குள் தாக்குதல்.. டிரம்ப்பின் மிரட்டல் முட்டாள்தனமானது.. ஈரான் கடும் காட்டம்

Apr 05, 2026,05:16 PM IST
டெஹரான்: இன்னும் 48 மணி நேரத்திற்குள் ஈரான் அமைதிக்கு உடன்படாவிட்டால் நரகத்தை கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியிருப்பது முட்டாள்தனமானது என்று ஈரான் வர்ணித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக இன்னும் 48 மணி நேரத்திற்குள் அமைதி உடன்படிக்கைக்கு ஈரான் சம்மதிக்க வேண்டும். இல்லையென்றால் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் தரைமட்டமாக்கப்படும்  என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

டிரம்ப்பின் இந்த 48 மணி நேரக் கெடுவை ஈரான் அரசு "முட்டாள்தனமான அணுகுமுறை" என்று விமர்சித்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவத் தளபதி அலி அப்துல்லாஹி கூறுகையில், அமெரிக்கா ஒருவேளை ஈரானைத் தாக்கினால், பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ஆதரவு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும்.

டிரம்ப் அவர்களே, எங்களுக்காக அல்ல, உங்களுக்காகத்தான் நரகத்தின் கதவுகள் திறக்கப்படப் போகின்றன என்று அப்துல்லாஹி எச்சரித்துள்ளார்.



ஈரான் தற்போது ஹார்முஸ் ஜலசந்தி என்ற முக்கிய கடல் வழிப்பாதையை மூடியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கு எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பெட்ரோல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு பிரச்சினையும் தலை தூக்கியுள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்கா தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறது. ஏற்கனவே மின் நிலையங்களைத் தாக்குவோம் என்று டிரம்ப் கூறியிருந்தார். பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். தனது காலக்கெடுவை நீட்டிப்பதாகக் கூறினாலும், ஈரான் அரசு "நாங்கள் யாருக்கும் பணியமாட்டோம்" என்பதில் உறுதியாக இருக்கிறது. அமெரிக்காவின் இந்த மிரட்டல் வெறும் வெற்று விளம்பரம் என்று ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்