டெஹரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விழுந்து கிடக்கும் இடத்தை நெருங்க முடியாமல் மீட்புப் படையினர் தடுமாறி வந்த நிலையில் தற்போது விபத்தில் சிக்கிய அதிபர் உள்ளிட்ட 8 பேரும் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேற்று கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு டெஹரானுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் அதிபர் ரைசி. அவரும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசேன் அமீரப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கி விட்டது. மற்ற இரு ஹெலிகாப்டர்களும் பத்திரமாக திரும்பி விட்டன. மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதியில் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை தேடும் பணியில் மீட்புப் படைகள் இறங்கின. ஆனால் மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்த இடத்தை நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த அதிபர் உள்ளிட்ட 8 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் தொடர்பான வீடியோ படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஹெலிகாப்டர் முழுமையாக நொறுங்கிப் போயுள்ளது. ஈரான் அதிபர் மரணமடைந்துள்ள செய்தியால் அந்த நாட்டு மக்கள் சோகத்துடன் பொது இடங்களில் குவிந்து கதறி அழுது வருகின்றனர்.
அயதுல்லா அலி கொமேனியின் தீவிர சிஷ்யர்
மறைந்த ஈரான் மத குரு அயத்துல்லா அலி கொமேனியின் சிஷ்யர்தான் ரைசி. இவரும் ஒரு மத குருதான். கொமேனிதான், இங்கிலாந்து எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தவர் என்பது நினைவிருக்கலாம். ரைசியும் கூட ஒரு கடினமான போக்கைக் கொண்ட தலைவராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். 2021ம் ஆண்டு அவர் அதிபரானார்.
1960ம் ஆண்டு ஷியா முஸ்லீம்களின் புனித நகரமான மஷாத் நகரில் பிறந்தவர் ரைசி. இவரது தந்தை மத குருவாக இருந்தவர். அவரது வழியைப் பின்பற்றி இவரும் மத குருவாக மாறினார். 15 வயதிலேயே இறைப் பணிக்கு மாறியவர் ரைசி. மேற்கத்திய நாடுகளின் கைப்பாவையாக திகழ்ந்த, ஈரானின் கடைசி மன்னர் ஷாவுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய மக்கள் புரட்சியில் கலந்து கொண்டு கொமேனி தலைமையில் போராடியவர் ரைசி. அந்தப் போராட்டத்திற்குப் பின்னர் ஷாவின் அரசு 1979ம் ஆண்டு கவிழ்ந்தது. கொமேனி புதிய ஈரானை உருவாக்கினார். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது மாணவராக இருந்தார் ரைசி. பின்னர் தனது 25 வயதில் வழக்கறிஞர் ஆனார்.

அதன் பிறகு அவர் ஈரானில் அமைக்கப்பட்ட ரகசிய விசாரணைக் கமிஷன்களில் இடம் பெற்றதாகவும், அந்த விசாரணைக் கமிஷன் பல ஆயிரம் அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கியதாகவும், பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வந்தன என்பது நினைவிருக்கலாம்.
ஈரான் அதிபராக இருந்த ஹசன் ருஹானியைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு வந்தார் ரைசி. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதிபர் பதவிக்கு வந்த ரைசி, இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். குறிப்பாக காஸா போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கு எதிராக தீவிரப் போக்கைக் கையாண்டார். இதன் உச்சமாக சமீபத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவும் உத்தரவிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இப்படிப்பட்ட நிலையில் அவரது முடிவு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
ஈரான் அதிபர் ரைசி மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஈரான் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் மிகவும் அக்கறை காட்டியவர் ரைசி. அவரை இந்தியா என்றும் நினைவு கூர்ந்திருக்கும். இந்த துயரமான நேரத்தில் ஈரான் மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}