சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' என்ற அருங்காட்சியகம் நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்தில் உள்ள கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை மார்ச் 6ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட நுழைவு கட்டணம் ஏதுமில்லை. இணையதளம் வழி அனுமதி டிக்கெட்டுகளை பெற்று பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, கடந்த 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் கலைஞர் நினைவிடத்தை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன் கலைஞரின் கலை, இலக்கியம், அரசியல், வாழ்க்கை, வரலாற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அந்த நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் கலைஞர் உலகம் என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழி சொல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீன தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனை பயணம் போன்ற அரங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கலைஞர் உலக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6ம் தேதி முதல் அனுமதிக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளம் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். ஒருவர் ஒரு அலைபேசி எண் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதி சீட்டுகள் வரை பெறலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையில் உள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும். தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தை தேர்வு செய்து முன்கூட்டியே அனுமதிச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி சீட்டு ஏதும் தேவையில்லை. நவீன தமிழ்நாட்டின் சிற்பி, தமிழ் தாயின் தவப்புதல்வன், ஓய்வில்லாமல் தமிழ் மக்களுக்காக உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெருமையை பறைசாற்றும் வகையில், நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தை பார்வையிட வரும் பொதுமக்கள் அரசிற்கும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி கண்டு களித்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}