கரூர் சம்பவம்... சிபிஐ.,க்கு மாற்றும் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

Oct 10, 2025,06:15 PM IST

டில்லி : கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு மீதான உத்தரவை ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.


கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும், மாவட்ட போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும் என்ற பாதிக்கப்படவர்கள் தரப்பிலும், பாஜக தரப்பு மற்றும் தவெக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


அதே போல் இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.




இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணையின் போது, போலீசாரின் அலட்சியம் காரணமாக தான் கரூர் கூட்ட நெரிசல் நடைபெற்றது. அமைதியாக இருந்த கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது தான் நெரிசல் ஏற்பட காரணம். 500 போலீசார் பாதுகாப்பிற்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கூட்ட நெரிசலில் போலீசார் ஒருவருக்கு கூட காயம் ஏற்படாதது எப்படி? கரூர் மருத்துவமனையில் ஒரே இரவில் 31 பேர் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அதிகாலை 4 மணிக்கே உடல்கள் எரிக்கப்பட்டு விட்டன. கூட்டத்திற்குள் நம்பர் பிளேட் இல்லாத ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்பட்டது எப்படி? அந்த ஆம்புலன்சில் செந்தில் பாலாஜியின் படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.


பகல் 12 மணிக்கு வருவதாக சொல்லி விட்டு இரவு 7 மணிக்கு விஜய் வந்ததே கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். விஜய் வருவதற்கு முன்பே பலர் மயக்கமடைந்தனர். விஜய் தண்ணீர் பாட்டில் வீசிய இடத்தில் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கரூர் சம்பவம் நடைபெற்ற போது உடற்கூராய்வு செய்வதற்காக பக்கத்து மாவட்டங்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒரு மாநாட்டிற்காக வந்த 220 டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு உடற்கூராய்வு, கலெக்டரின் அனுமதியுடன் தான் நடைபெற்றது எனு தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அவசர காலத்தில் அல்லது சிறப்பு உத்தரவின் பேரில் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்ய முடியும். கரூர் மருத்துவமனையில் எத்தனை உடற்கூராய்வு மேஜைகள் உள்ளன? பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட மனு மீது சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை புரிந்து கொள்ள முடியவில்லை. மனுதாரர் கேட்டது ஒன்று, கோர்ட் வழங்கிய உத்தரவு ஒன்று. கரூர் மருத்துவமனையில் தகுதியான டாக்டர்கள் உடற்கூராய்வு செய்வதற்கு இருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட சரமாரியாக பல கேள்விகளை தமிழக அரசிடம் எழுப்பியது. 


இதற்கு பதிலளித்த தமிழக அரசு, இந்த வழக்கு தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட், விரிவான பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்படும் விபரங்களை பார்த்த பிறகு தான் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கூறி இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்