- நவீன் ஸ்ரீதர்
உலகில் பல்வேறு தேசங்களும் இனங்களும் இருப்பினும் அதில் தொன்று தொட்டு சிறப்பாக திகழ்ந்து வருவது பாரத தேசமும் தமிழினமுமே!
பண்டைய தமிழகத்தை மூன்று பேரரசுகள் சிறப்பாக ஆட்சி செய்து வந்துள்ளனர்; அவர்கள் சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள். அவர்களுள் மட்டுமல்லாது உலகின் மிகவும் தொன்மையான அரச குடியாக பாண்டியர் குலமே திகழ்கிறது. "பாண்டிய நாடே பழம்பதியாகவும்" என்று மாணிக்கவாசகர் இதையே கூறுகிறார்.
பாண்டியர்களுக்கு பல்வேறு சிறப்புகள் இருப்பினும் அவற்றுள் முத்தாய்ப்பானது மணிமகுடம் போல் திகழ்பவர்கள் அன்னை "தடாதகை" எனப்படும் மீனாட்சி அம்பிகையும், அவளை கரம் பிடித்து பாண்டிய நாட்டை ஆண்ட சுந்தரேசரான சொக்கநாதரான சிவபெருமானுமே. சகல புவனங்களையும் பிரபஞ்சத்தையும் இயக்கும் ஆதிபராசக்தி தான் ஒரு மானிட பெண்ணாக சில இடங்களில் அவதரித்தாலும் அவற்றுள் மிகவும் சிறப்பானது அவள் தடாதகை என்ற திருநாமம் கொண்டு மதுரையம்பதியில் அவதரித்ததே! தன்னிகரில்லா பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது மதுரை மாநகரம். மதுரைக்கு இருக்கும் சிறப்புகள் வேறு எந்த நகரத்திற்கும் இருக்காது. அரசு, ஆன்மீகம், தமிழ்,பண்பாடு, கலாச்சாரம், தொன்மை, வரலாற்று சிறப்பு,வீரம் முதல் விருந்து வரை இந்நகரில் தலைத்தோங்காதது எதுவும் இல்லை.

அம்பிகை ஒரு பெண் இளவரசியாக அக்கினியிலே அவதரித்து அவணி(உலகம்) ஆளும் பேரரசியாக முடிசூடி தேவர்கள் முதல் சகலரையும் வென்றும் ஈசனின் மனதையும் வென்றும் அவள் பாதம் பதிய நடந்த ஊர் மதுரை ஆகும். சிவபெருமானும் சுயம்பு லிங்கமாக, மாப்பிள்ளையாக , அரசராக, விறகு சுமப்பவராக , போர் வீரராக, வளையல் வியாபாரியாக, கூலி தொழிலாளியாக, எல்லாம் வல்ல சித்தராக, சாட்சிசொல்பவராக,குதிரை வியாபாரியாக,பாடகராக என பல வடிவங்களில் வந்து தன் பாதங்களால் புனிதப்படுத்தியது இந்த மதுரை மாநகரத்தை தான். திருமாலும்,பிரம்மனும் காண முடியாத ஈசனின் அடியையும் முடியையும் கண்டது இந்த மதுரை மண் தான். ஆம்! இதே மண்ணில் தான் ஈசன் தன் பாதங்கள் பதிய நடக்கிறார், இதே மண்ணை தான் தன் தலையிலும் சுமக்கிறார். இப்படி பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட நகரம் மதுரை.
மதுரை என்றாலே நம் மனதில் அடுத்து நினைவுக்கு வருபவள் மீனாட்சியம்மை தான். தன்னிகரில்லா தனிப்பெரும் கருணை கடலாக இருந்து உலகப்புகழ் பெற்ற ஆலயத்தின் தலைவியாய் திகழ்பவள் அன்னை மீனாட்சி. பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால பாடல்கள் வரை அனைத்தாலும் ஒரு தலத்தின் இறைவி சிறப்பிக்கப்படுகிறாள் எனில் அது அங்கயற்கண்ணி பராசக்தியான அன்னை மீனாட்சி மட்டுமே. சக்தி பீடங்களில் மிக உயர்ந்த "மனோன்மணி" பீடமாக திகழ்வது முதல், அம்பிகை வேறு எங்கும் இல்லாத வகையில் அம்பிகை உபாசனை மார்க்கமாக சொல்லப்படும் ஸ்ரீவித்யையில் மிக உயரிய வடிவங்களான பாலாம்பிகை, புவனேஸ்வரி, கௌரி, சியாமளை, மாதங்கி, பஞ்சதசி, ஷோடசி மற்றும் மகாஷோடசி ஆகிய எட்டு உயரிய ஆற்றல்களையும் ஒரு நாளில் நடைபெறும் எட்டு கால பூஜைகளில் வெளிப்படுத்தி அருள்புரியும் ஒரே உன்னத தலமாகவும் திகழ்கிறது.

மேலும் முன் தோன்றிய மூத்த சுயம்பு லிங்கமாக சொக்கநாதர் திகழ்வதும், 64 திருவிளையாடல்கள்(சொக்கநாதரின் அருளாடல்கள் அளவற்றவை!) நிகழ்த்தி சங்கம் வைத்து தமிழ் வளர்க்க காரணமாகவும், எம்பெருமான் தானே புலவராக வந்த பெருமையும் என மதுரை தலத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
மதுரை தலத்தின் மகிமையை கூறும் நூல்களில் இன்று வரை நமக்கு கிடைத்த நூல்களும் பல, மேலும் நம் கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் நூல்களும் பற்பல. உலகின் நிலப்பரப்பை காகிதமாக்கி, கடல் நீரை மையாக்கி எழுதினாலும் அன்னை மீனாட்சி மற்றும் சோமசுந்தர பெருங்கடவுளின் பெருமைகளை விவரித்திடல் அரிது! அப்பேற்பட்ட தன்னிகரற்ற சிறப்புக்களைப் பெற்ற மதுரை நகரை பற்றியும் அம்மையப்பரான ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பற்றியும் தொடர்ந்து சிந்திப்போம்.
மீனாக்ஷீம் !!!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}