Siva Puranam: அரும் பெரும் ஞானபொக்கிஷம் ... சிவபுராணம் (1)

Apr 20, 2026,10:27 AM IST

- சிவ.ஆ.  மலர்விழி ராஜா


பெற்ற தாய் தனை

மகமறந் தாலும்.... 


பிள்ளை யைப்பெறும்

தாய்மறந் தாலும்.....

உற்ற தேகத்தை 

உயிர்மறந் தாலும்..... 


உயிரை மேவிய

உடல்மறந் தாலும்...... 


கற்ற நெஞ்சகம்

கலைமறந்  தாலும்..... 


கண்கள் நின்றிமைப்

பதுமறந் தாலும்...... 


நற்ற  வத்தவர்  உள்

இருந் தோங்கும்..... 


நமச்சி  வாயத்தை

நான்மற  வேனே......




சிவபுராணம்...! 

ஓம் நமசிவாய....! வாழ்க

எல்லைகளுக்கு உட்படாத அபரிமிதமான

சக்திகளை எல்லாம் தன்னகத்தே கொண்டவராகவும்

எதிலும் பற்று இல்லாமல் அமைதி யாகவும் யோக நிலையில் அமர்ந்து பல திருவிளையாடல்களை

புரிந்த சிவ பெருமானை 

பற்றியும் அவராலே இயற்றப்பட்ட பல

திருவிளையாடல்களை நாம் இங்கு காண்போம். 


சிவபுராணம் என்பது

சிவபெருமானின் தோற்றம். 

அவரின் சக்திகள் மற்றும் அவரால் இயற்றப்பட்ட

திருவிளையாடல்களின்

தொகுப்பாகும். 


புராணம் என்றால் என்ன  ? 


புராணம் என்பது நம் முன்னோர்களால் எக்காலத்திலும் வாழும் மானிட பிறவி களுக்காக

அளிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். 

புராணம் என்றால் தொன்மை என்பது பொருள். 


பல பெருமைகளை கொண்ட நமது நாட்டில்

வாழ்ந்த நமது முன்னோர்களால் எக்காலத்திலும்

நிலவும் சங்கடங்கள் அனைத்தும் களையவும்

அறவழியில் சென்று தீர்வு காணும் வகையில் இயற்றப்பட்ட காவியமாகும். 


பிரமிக்கத்தக்க வகையில் பல நன்மைகள் தரும் கதைகளையும்  ஞான மார்க்கத்தின் அவசியத்தையும் பல யுகங்களாக  காலம் தவறாமல்  அனைவரிடத்திலும் இனிமையாகவும் எளிதில் புரியும் வண்ணம் இறைவனால் படைக்கப்பட்ட அரும் பெரும்

ஞானபொக்கிஷம்  தான் இந்த சிவபுராணம்... 


பிரளயம்.... 


பிரளயம் உண்டாகி உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மடிந்து போய் விடுகிறது. உலகில் அனைத்து பகுதிகளிலும் நீரால் சூழப்பட்டு இருந்தது. சகல லோகங்களும் நீரினில் மூழ்கி எங்கும் சமுத்திரமாக காட்சி யளித்தது. அந்த பிரளயத்தின்  காரணமாக சிருஷ்டி கர்த்தாவான  பிரம்ம தேவர் மயக்கமுற்று ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். 


நீர் பரப்பின் மீது ஆதிசேஷன் மேல் நாராயணன் சயனித்திருந்தார். 


தீடீரெனக் கண்விழித்து பார்த்த  பிரம்மாவிற்கு

பிரளயத்தின் விளைவாக அனைத்து லோகங்களும் நீரினால் அழிந்துவிட்டதை கண்டார். 


பிரளயத்தின் விளைவாக அனைத்தையும் மறந்த

பிரம்ம தேவருக்கு தாம் தான் சிருஷ்டி கர்த்தா

என்பது மட்டுமே நினைவில் இருந்தது. 


மீண்டும் தனது பணியை தொடங்கினார். தாம் எண்ணிய பணிக்கு உதவும் வகையில் யாரேனும் இருக்கிறார்களா என பார்த்தார். 


அப்போது ஆனந்த நித்திரையில் இருந்த நாராயணனை பார்த்தார். 


தான் எண்ணிய பணியை நிறைவேற்ற தனக்கு உதவியாக இருக்கும் வகையில் இன்னொருவரை கண்ட பிரம்மா அவர் அருகில் சென்றார். 


நித்திரையில் இருந்த நாராயணனை எழுப்பி சர்வ லோகங்களும் நீரினால் அழிந்துள்ள இந்த நேரத்தில் நித்திரையில் ஆழ்ந்து உள்ள தாங்கள் யார்   ....? 

என கேட்டார். 


நித்திரையில் ஆழ்ந்த நாராயணன் அனைத்தும் மறந்தவராக

காட்சியளித்தார். 


பின்பு சிறிது காலத்திற்கு பின் தாம் யாரென்றும் தன்னுடன்

உரையாடுபவர் யார் என்பதை அறிந்த நாராயணன் என்ன குழந்தாய் என்ன வேண்டும் என வினவினார். 


இதை கேட்ட பிரம்ம தேவர்..... 

யாரை குழந்தை என்று அழைக்கிறாய் என கடுங்கோவத்துடன்

கேட்டார். 


நான் யாரென்று நீர் அறிவீரோ...... ? 


நானே இந்த சிருஷ்டி யை படைத்தவன்....! 

என்றார் கர்வத்தோடு பிரம்ம தேவர் கடுமையான கோபத்துடன் நாராயணனிடம் உரையாடினார். 


நாராயணன் இவரது பதில் உரையை கேட்டு சினம் கொள்ளாமல் இனிமையான குரலில்

நீரே எம்மிடமிருந்து தோன்றியவர். 

என்று பதில் உரையை அளித்தார். 


இதைக் கேட்ட பிரம்ம தேவர் நானே உன்னை படைத்தவன் என்று கர்வத்தோடு உரையாடினார். 


நாராயணன் சிரித்த முகத்தோடு நீரே எனது நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய தாமரை மலரில் உதயமானவர் என்றும்  இதுவே உனது பிறப்பின் இரகசியம் என்றும் கூறினார். 


இதை சற்றும் எதிர்கொள்ளாத பிரம்ம தேவர் எதிர் வாதம் புரிந்தார். 

இருவருக்குமிடையே இருந்த உரையாடல் கடுமையான வாங்கு வாதமாக மாறியது. 


அவ்வேளையில் அக்னி சொரூப ஜோதி வடிவில் அண்டசராசரங்களின்

பரம்பொருளான   சிவ பெருமான் லிங்க வடிவில் தோன்றினார். 


இதை கண்ட இருவரும் 

தம்மை விட அதி சக்தி வாய்ந்த இன்னொருவர் இருக்கக் கூடும் என அறிந்தனர். 


அவ்விருவரும் தங்கள்

வாதத்திற்கான

மூல காரணத்தை கூறி

இதற்கு தாங்களே தீர்வு

வழங்க வேண்டும் என்று வேண்டினார்கள். 


அப்போது லிங்க ரூபத்தில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது. 


அதாவது.....


உங்கள் இருவரில் யார் எனது அடியை அல்லது முடியை முதலில் காண்கின்றீர்களோ

அவரே முதலில் தோன்றியவர் என்று அந்த அசரீரி  ஒலித்தது. 


இதுவே சரியென்று முடிவெடுத்த இருவரும் அன்னப்பறவை அவதாரம் எடுத்து லிங்கத்தின் முடியை காண பிரம்ம தேவர் தனது பயணத்தை தொடங்கினார். 


நாராயணன் வெண் பன்றியின் அவதாரம் எடுத்து லிங்கத்தின்

அடியை காண தனது பயணத்தை தொடங்கினார். 


இறைவனின் திருவிளையாடல் புராணம் தொடரும். 


ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்