மார்கழி 26 திருப்பள்ளியெழுச்சி பாடல் 6 : பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்

Jan 09, 2025,05:05 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 06 :


பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார்

பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில்

வணங்குகின்றார், அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!

இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!




பொருள் : 


உன்னுடைய அருள் என்னும் பெரிய பாக்கியத்தை உள்ளத்தில் உணர்ந்த அடியாளர்கள், தொண்டர்கள் என கணக்கில்லாத பலரும் குடும்பம், பந்த பாசங்களை உதறி விட்டு, உன்னை தரிசிக்க வந்துள்ளார்கள். கண்களில் மை தீட்டிய பெண்களும் மனித இயல்புக்கு ஏற்ப உன்னை வணங்க வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்வதி தேவியின் கணவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டுள்ள திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவ பெருமானே! இந்த பிறவி என்னும் பெரும் துயரத்தில் இருந்து எங்களை விடுவித்து, உன்னுடைய அருளால் எங்களை ஆட்கொண்டு அருள் செய்து, முக்தி என்னும் நிலையை அருள்வதற்காக எங்களுடைய பெருமானே, துயில் எழ வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்