மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு அறிவிப்பு!

Jun 12, 2026,11:18 AM IST

சென்னை: தமிழகத்தில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, ரூ.134.83 கோடி மதிப்பீட்டிலான ‘குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தை’ முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமான தேதியில் திறக்கப்படாததைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், குறுவை சாகுபடியையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்த சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குப் பல்வேறு மானியங்களும், சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்வதற்குத் தேவையான விதைப்பு ஊக்கத்தொகை, உயிர் உரங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட விதை நெல் மானியம் ஆகியவை தங்குதடையின்றி தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் ஆரம்பக்கட்ட சாகுபடி செலவுகள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நீர் பற்றாக்குறை உள்ள இக்கட்டான சூழலில், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவாக, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் தினசரி 18 மணி நேரம் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.




இந்த மின்சார விநியோகம் விவசாயிகளுக்குப் பெரும் துணையாக இருக்கும் என்று வேளாண் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


வழக்கமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் கவலையைத் தீர்க்கும் வகையில் தமிழக அரசு இந்த மாற்றுத் திட்டத்தை உடனடியாக வகுத்துச் செயல்படுத்தியுள்ளது.


இந்த திட்டத்தின் மூலம் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, குறுவை சாகுபடி மேற்கொள்ளும் டெல்டா அல்லாத பிற மாவட்ட விவசாயிகளும் பெருமளவில் பயனடைவர். விவசாயிகளின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும், மானியங்களை நேரடியாக விவசாயிகளின் கணக்குகளுக்குச் சென்றடைய வைக்கவும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேளாண் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயப் பெருங்குடி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்