லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் ஒரு கேங்ஸ்டர் மரணமடைந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரி என்ற முன்னாள் கேங்ஸ்டர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் முக்தார் அன்சாரி. அவரது மரணத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாரணாசி, காஸிப்பூர், மாவ், பந்தா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக பந்தா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரிக்கு நேற்று இரவு மயக்கம் வந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாக முக்தார் அன்சாரி இறந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவரை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக முக்தார் அன்சாரியின் மகன் மற்றும் சகோதரர் ஆகியோர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று முக்தார் அன்சாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்ப்படவுள்ளது. மருத்துவமனையைச் சுற்றிலும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வாரணாசி, பந்தா, காஸிப்பூர், மாவ் ஆகிய மாவட்டங்களில் முக்தார் அன்சாரிக்கு மிகப் பெரிய செல்வாக்கு உள்ளது. காஸிப்பூரில் அவரது வீடு உள்ளது. அங்கு பெருமளவில் அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். கேங்ஸ்டராக இருந்த முக்தார் அன்சாரி பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.
முக்தார் அன்சாரி மறைவு காரணமாக எழுந்துள்ள பதட்டத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸாரும் ஆங்காங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவ் சதர் தொகுதியிலிருந்து உ.பி. சட்டசபைக்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தார் அன்சாரி. அவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 8 வழக்குகளில் இதுவரை அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். பந்தா சிறையில் தண்டனையை அவர் அனுபவித்து வந்த நிலையில் அவரது மரணம் சம்பவித்துள்ளது.
முன்பு ஆதிக் அகமது.. இப்போது முக்தார் அன்சாரி

உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான கேங்ஸ்டர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள் அல்லது கொல்லப்பட்டு வருகிறார்கள். சமீப காலத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் என்றால் கடந்த ஆண்டு ஆதிக் அகமது மற்றும் அவரது தம்பி ஆகியோரை, செய்தியாளர்கள் போர்வையில் ஊடுறுவிய ஒரு கும்பல் நேரலையில் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம்தான். ஆதிக் அகமதுவும் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர்தான்.
இந்த நிலையில் இப்போது முக்தார் அன்சாரியின் மரணம் வந்து சேர்ந்துள்ளதால் உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு கேங்ஸ்டர்கள் மரணம் என்பது தொடர் கதையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}