ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

May 30, 2025,05:58 PM IST

சென்னை: சாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி மாநில, தேசிய எல்லைகளைக் கடந்து தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஒரு மாபெரும் கலைஞர் கமல்ஹாசன். அவரை கன்னட மொழிக்கு எதிரானவர் என்பது போல சிலர் சித்தரிக்க முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டத்தைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அரசியல் தலைவர்களான சீமான், பண்ருட்டி வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:




உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரைப்படங்களைக் கடந்து இந்திய அளவிலும் அகில இந்திய உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும் உணர்வாகவும் உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.


வெகுஜன மக்களை மட்டுமின்றி அந்த மக்களின் பேராதரவையும் அபிமானத்தையும் ஈட்டிய பல திரை நட்சத்திரங்களின் மனதிலும் மதம் இன மொழி பேதமின்றி தனது பேரன்பாலும் கலை திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன். அந்த வகையில் அவருக்கும் கிரிஷ் கர்நாட்டுக்கும் உள்ள நட்பும் அவர் எழுத்தில் மேல் இருக்கும் பெரும் ஈடுபாடும் அனைவரும் அறிந்ததே. 

அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ராஜபார்வை திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று கிளாப் அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த டாக்டர் ராஜ்குமார் அவர்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம். பின்னாளில் துரதிர்ஷ்டவசமாக டாக்டர் ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட சமயத்தில் அதை கண்டித்தும் அவரை மீட்க வேண்டியதை வலியுறுத்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களில் முதல் குரலாக ஒலித்து முன்னின்றவர்களில் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியதை எவரும் மறுக்க முடியாது.


கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமார் அவர்களை தன் உடன்பிறவா மூத்த சகோதரராகவும் அவரது புதல்வர் சிவராஜ்குமார் அவர்களை தனது மகனுக்கு இணையாகவும் கன்னட மக்களை தனது குடும்பமாகவும் கருதுபவர் கமல்ஹாசன்.


மிக சமீபத்தில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்ற சிவராஜ்குமார் அவர்கள் மீது கமல்ஹாசன் கொண்ட அதீத அக்கறையின் வெளிப்பாடாக அவரை தொடர்பு கொண்டு விசாரித்து ஊக்கம் அளித்ததை மிக நெகிழ்ச்சியுடன் தக்லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமார் அவர்களே நிகழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது. 


அந்த நிகழ்ச்சியின் தாக்கம் குறையாமல் அடுத்து மேடை ஏறிய கமல்ஹாசன் ராஜ்குமார் தனக்கு மூத்தவர் என்றும் அவர் குடும்பத்தில் அவருக்கு பின் தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக நிறுத்தியும் சிவராஜ் குமார் அவர்கள் அந்த குடும்பத்தில் தனக்கு பின் வந்த இளையவர் என்பதையும் பேரன்போடும் உரிமையோடும் சுட்டிக் காட்டும் விதமாக, அவர் குடும்பத்தில் தமிழரான எனக்கு பின் தான் கன்னடரான சிவராஜ்குமார் தோன்றினார் என்னும் பொருள்பட பேசினார். சிவராஜ்குமார் அவர்கள் மீண்டு வந்ததை கண்ட மகிழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்கள் வெளிப்படுத்திய அந்த வார்த்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு சிலர் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் அந்த தவறான புரிதலை தீயன வேகமாக பரப்பியும் வருகின்றனர். அதனால் தேவையற்ற சங்கடமான சூழலையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. 


இந்திய மொழிகள் அனைத்திற்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசன் ஒருமைப்பாட்டின் குரலாகவும் சகோதரத்துவத்தின் அடையாளமாகும் திகழ்ந்து வருபவர். அதன் வெளிப்பாடாகவே கர்நாடகா கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். கன்னட மொழியை சீர்தூக்கிப் பார்க்கின்ற கமல் அவர்களுக்கு ஒரு போதும் சிறுமைப்படுத்தும் நோக்கம் இருந்ததில்லை என்பதை அவருடைய கடந்த கால நிகழ்வுகள் தரவுகளாக இருக்கின்றன.


உண்மை இவ்வாறு இருக்க அதற்கு மாறாக கமல் அவர்களை கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சாதி மதம் இனமொழி என்ற எந்த பாகுபாடும் இன்றி மாநில தேசிய எல்லைகளைக் கடந்து தனது வாழ்நாளை முழுவதுமாக கலைப்பணிக்கு அர்ப்பணித்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதியை சுய சிந்தனையும் பகுத்தறிவும் கொண்ட எவருமே அனுமதிக்கலாகாது.




சுய ஆதாயங்களுக்காக குறிப்பிட்ட சிலர் திரு கமல்ஹாசன் அவர்களை கருவியாக பயன்படுத்தி கன்னட - தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிக தவறான முன்னுதாரணமாகவும் வரலாற்றில் ஒரு மாபெரும் கரும்புள்ளியாகவும் நிலைத்து விடும்.


கர்நாடக மாநிலத்தின் அனைத்து அன்பர்களும் திரைத்துறை அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் கமல்ஹாசன் அவர்களது உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாக உதிர்த்த வார்த்தைகளின் உண்மையான பொருளை உணர்ந்து ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என தமிழ் திரையுலகத்தின் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம்.


எந்த கலையும் மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும் எல்லைகளையும் கடந்தது. அந்த கலையை ரசிக்கும் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட அது பொருந்தும். இந்திய மொழிகள் அனைத்துமே நீடு புகழோடு வாழ வேண்டும் அன்பும் புரிதலும் மாற்றார் பண்பாடு போற்றுதலும் மட்டுமே நம்மை இருக்க பிணைத்து வளம் தரும் எதிர்காலத்திற்கு வழி சேர்க்கும், பேதமற்ற ஒற்றுமை பாராட்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

news

கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

RIP Rajesh: தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம்!

news

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதியை அனுமதிக்க முடியாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 16 கி.மீட்டருக்கு ரோடு ஷோ!

news

பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!

news

வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்