சென்னை: திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மகாகவி பாரதி பாடல் வரிகளில் உருவாகியுள்ள நெஞ்சு பொறுக்குதில்லையே படத்தை நவரச கலைக்கூடம் என்ற புதிய புதிய பட நிறுவனம் சார்பில் கிறிஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிறிஸ்துதாஸ் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். வீட்டை விட்டு வெளியேறும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாக வைத்து, சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், இளைஞர்களின் மனநிலையையும் வெளிப்படுத்தும் ஒரு சமூக சிந்தனை திரைப்படமாக பிளஸ்ஸோராய்ஸ்டன் மற்றும் கவி தினேஷ்குமார் ஆகியோர் இருவரும் இயக்கி உள்ளனர்.
இதில் அன்பே வா, பாவம் கணேசன், சில்லுனு ஒரு காதல் போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். அதேபோல் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த புவனேஸ்வரி மற்றும் சூரிய வம்சம், என்றென்றும் புன்னகை, எங்கள் வீட்டு மீனாட்சி போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்த நித்தியாராஜ் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
நெஞ்சு பொறுக்குதில்லையே திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், அரசியல் பிரபலங்கள், மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், படக்குழுவினரை வாழ்த்தியதுடன், படத்தின் இசையை வெளியிட்டார். அப்போது இப்படம் குறித்து கூறியதாவது:
இப்படத்தின் தலைப்பை தேர்வு செய்ததிலிருந்தே இவர்களுக்கு சமூக பொறுபுணர்வு இருப்பது என்பது புரிகிறது. மகாகவி பாரதி பாடிய வரிகளில், மிக முக்கியமானது நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில், இந்த நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வரிகள். அந்த வரியை தலைப்பாக வைத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். நிலையான மனம் நிலை இல்லாதவனை குறிக்கும் இந்த வரிகள், ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், உறுதியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் இந்த பாடல் மானுட உளவியலை பற்றிய முக்கியமான பாடல். மகாகவி எந்த பொருளில் ஆதங்கப்பட்டானோ அந்த கருத்தில் இயக்குநரும் தயாரிப்பாளரும் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ஒரு படம் எடுத்தாலும் சோஷியல் மேசேஜ் உடன் இருக்க வேண்டும் என்ற ஆசையை தயாரிப்பாளர் சொன்னார். சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல் உலகம் முழுக்க இருக்க கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும். இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாக பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக பார்க்க வேண்டும். காதல் எல்லா மனிதருக்கும் இருக்கிறது. காதல் இயல்பான பண்பு அதை ஆர்டிஃபிஷியலாக உருவாக்கி விட முடியாது. அது ஆழமான உணர்வு, நுட்பமான உணர்வு. காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தான் முக்கியம். அதை கலைஞர்கள் நுட்பமாக கவனித்து அதை சமூகத்திற்கு முக்கியமான படைப்பாக மாற்ற வேண்டும்.
கல்யாணத்திற்கு பிறகான பிரச்சனையை ஆணவக்கொலையை மையப்படுத்தி, தங்கள் பார்வையில் படைப்பாக்கியிருக்கிறார்கள். இது கௌரவக்கொலை அல்ல, வறட்டு கௌரவக்கொலை என்று தான் நான் குறிப்பிடுவேன். தான் பெற்றெடுத்த அன்பான பிள்ளைகளை கொலை செய்வது வறட்டு கௌரவக்கொலை தான். ஆணவக்கொலை, சிசுக்கொலை இந்தியாவில் தான் அதிகம். இந்த இரண்டையும் நாம் அழித்து ஒழிக்க வேண்டும். பாலின பாகுபாடு இல்லாமல், சம உரிமை தரும்போது தான் இந்த நிலை மாற வேண்டும். ஏற்கனவே பல படங்கள் எடுத்தாலும் இன்னும் இன்னும் பல படங்கள் இந்த கருத்துக்களை பேச வேண்டும். காதலை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பது நம் சோஷியல் அமைப்பு தான் காரணமாக இருக்கிறது. நம் விருப்பம் இல்லாமலேயே நம் மீது ஜாதி சமூக முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. அவர்களுக்கு சமூகம் ஒரு மிகப்பெரும் அழுத்தத்தை தந்து விடுகிறது. காதல் அவர்களுக்கு தரும் அழுத்தம் தான் அவர்களை ஜாதி தாண்டிய காதலை குற்றமாக பார்க்க வைக்கிறது.
இதில் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். இதை விவாதிக்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது. அதை சரியாக சிந்திக்கும் படைப்பாளிகளால் தான் இந்த படைப்பை தர முடியும். உரையாடலுக்கு உற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும். இப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இப்படம் பெரிய வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}