"சிட்டுக் குருவி.. முத்தம் கொடுத்தபோது.. எனக்கு முதல்மீசை முளைத்தது".. வைரமுத்து!

Nov 23, 2023,04:35 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: டாக்டர் பட்டம் பெற்ற பின்னணிப் பாடகி பி சுசிலாவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து "சிட்டு குருவிக்கு.. முத்தம் கொடுத்த போது.. எனக்கு முதல் மீசை முளைத்தது".. என கவிதை நடையில் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


கான சரஸ்வதி, மெல்லிசை அரசி, இசைகுயில், கான குயில், என பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி பி சுசிலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஆகிய மொழிகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர். பல்வேறு இந்திய மொழிகளில் அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். நாட்டிலேயே முதல் முறையாக தேசிய விருதை வென்ற முதல் பெண் பாடகி. 


எந்த மொழியில் இவர் பாடினாலும் இவரின் பாடல் வரிகள் துல்லியமாக இருக்கும். தெலுங்கு பாடல்களுக்கு மூன்று தேசிய விருதுகளும்,  தமிழக, கேரளா, ஆந்திர மாநில அரசுகளின் விருதுகளை 11 முறையும் பெற்றவர்.




சமீபத்தில் டாக்டர் ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் சார்பில் பின்னணி பாடகி பி சுசீலா விற்கு முதல்வர் மு க ஸ்டாலின் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின் உணர்ச்சி பொங்க பேசினார் . அப்போது கானக்குயில் அரசியின் இசையில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அதில் நானும் ஒருவர். குறிப்பாக பயணம் செய்யும்போது இவர்கள் பாடிய பாடல்களைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், பி.சுசிலா பாடிய "நீ இல்லாத உலகத்திலே" என்ற பாடலை பாடியும் அசத்தினார் முதல்வர்.


பி.சுசீலாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை வடிவில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.


அந்தக் கவிதை...


நீ 

மலர்ந்தும் மலராத பாடியபோது

என் பாதிமலர்க் கண்களில்

மீதி மலர்க் கண்களும் 

மென்துயில் கொண்டன


சிட்டுக் குருவி

முத்தம் கொடுத்தபோது

எனக்கு முதல்மீசை முளைத்தது


உன்

கங்கைக்கரைத் தோட்டத்தில்

நான் கால்சட்டை போட்ட

கண்ணனானேன்


சொன்னது நீதானாவென்று

சொற்களுக்கிடையில்

விம்மிய பொழுது

என் கண்களில் 

வெளியேறியது ரத்தம் 

வெள்ளை வெள்ளையாய்


காலமகள் கண்திறப்பாள் 

பாடியபோது

என் எலும்பு மஜ்ஜைகளில்

குருதியும் நம்பிக்கையும்

சேர்ந்து சுரந்தன


நீ காதல் சிறகைக்

காற்றினில் விரித்தபோது

ஒரு தேவதையின் சிறகடியில்

என் காதல் சம்பவம் நிகழ்ந்தது


நீ கண்ணுக்கு மையழகு 

பாடவந்தபோது

சந்திரனும் சூரியனும்

நட்சத்திரமும் கூழாங்கல்லும்

என் தமிழும் அழகாயின


எத்துணையோ

காயங்களை ஆற்றியபிறகு

உன்னை டாக்டர் என்கிறார்கள்


வாழ்க நீ அம்மா!

சமீபத்திய செய்திகள்

news

Eradicate Tuberculosis.. இந்த அறிகுறிகள் இருந்தால்.. எக்ஸ்-ரே (X-ray) எடுத்துக்கொள்வது அவசியம்!

news

உறவுகள் விட்டுச் செல்லும் நினைவுகள்.. Our Signature Caption

news

வரம் வாங்கிப் பிறந்தவர்கள் நாம்... இருப்பினும் வருமுன் காப்போம்!

news

திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது

news

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு

news

தவறுதான்.. நம்மை சரி செய்ய உதவும்..!

news

அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு

news

படகு படகு.. வாழ்க்கைப் படகு.. The Boat!

news

தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்