- பூரணவள்ளி சேகர்
கண்ணன் தன் மனைவி கவிதாவுடன் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்து வந்தான்
தனியார் கம்பெனியில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தான். தன் ஒரே மகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தான். தன் தந்தை வாங்கி வைத்திருந்த சிறிய ஓட்டு வீட்டில் குடியிருந்த தால் வாடகை பிரச்சினை இல்லாமல் இருந்தது.
கவிதாவும் கணவன் கொடுக்கும் பணத்தில் மிகவும் சிக்கனமாகக் குடும்பம் நடத்தினாள். வீடு சிறியதாக இருந்தாலும் நகரின் நடுப்பகுதியில் இருந்தது அவர்களின் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.
கவிதாவிற்கு தையல் கலை தெரியும் என்பதால் வீட்டு வேலை முடித்த பிறகு அக்கம்பக்கத்தினருக்கு ரவிக்கை கள் தைத்துக் கொடுத்து சிறிதளவு வருமானம் ஈட்டினாள்.
தன் மகள் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்றபின் வீட்டை நன்றாகப் புதுப்பிக்க வேண்டும் என்று மூவரும் பேசிக் கொள்வார்கள்.
அரசுப் பள்ளியில் தற்போது பதினோராம் வகுப்பு படிக்கும் மகள் கமலிக்கு படிப்பின் அவசியமும் தெரியும். பெற்றோரின் பேச்சு மேலும் நன்கு படிக்க உந்துதலாக இருக்கும்.
திடீரென ஒரு நாள் கவிதாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நரம்பில் தொந்தரவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
அருகிலுள்ள மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டாள் கவிதா. அதிகமாக செலவு ஆனது. மருத்துவர்களின் பேச்சு வேத வாக்கானது. கொஞ்சம் செலவாகும் ஆனால் காப்பாற்றி விடலாம் என்ற வார்த்தைகளால் தந்தையும் மகளும் ஆசுவாசப்பட்டனர்.
மருத்துவ செலவிற்காக தன் வீட்டை கந்தன் என்பவரிடம் அடமானம் வைத்தான் கண்ணன். வேறு வீட்டிற்குப் போக முடியாது எனவும் மாதாமாதம் வாடகையாக ஒரு தொகை தருவதாக இருவரும் பேசினர்.
அந்த வீட்டின் அமைவிடம் கந்தனின் மனதை மாற்றியது. அடமானப் பத்திரத்தில் ஆறு மாதத்திற்குள் கடனை அடைப்பதாகவும் இல்லையெனில் வீட்டைக் கந்தன் பெயருக்கு கிரையம் செய்து தரச் சம்மதம் எனப் பத்திரம் எழுதி வாங்கினான் கந்தன்.
கண்ணன் இருந்த மனநிலையில் எதையும் கவனிக்காமல் கையொப்பம் இட்டான். கவிதா சிறிது உடல்நலம் பெற்று வீட்டில் படுக்கையில் இருந்தாள். ஒரு மாத வாடகை தரத் தாமதமான போது வீட்டைக் காலி செய்து தர வேண்டும் என்று கந்தன் தொல்லை கொடுத்தான். அப்போதுதான் கண்ணன் பத்திரத்தின் உண்மையை அறிந்தான்.
மனம் வேதனை அடைந்த கண்ணன் அருகிலிருந்த சிவன் கோவிலில் தன் பிரச்சினைக்கு நியாயம் வழங்குமாறு மனம் நொந்து வேண்டினான்.
தான் வாங்கிய பணத்தை எப்படியாவது அடைத்துவிட வேண்டும். கவிதாவிற்கு பிரச்சினை தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். கந்தனுக்கு வாரிசு என்று யாரும் இல்லை. அப்படியிருக்கும் போது ஏன் இவ்வாறு தன் வீட்டிற்கு ஆசைப் படுகிறான். அவனுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்றும் வேண்டினான் கண்ணன்.
கந்தன் பத்திரத்தை எடுத்துக் கொண்டு கண்ணன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். கோயில் வாசலில் வந்த கந்தன் மீது லாரி மோதியது. கந்தனும் பத்திரமும் லாரி சக்கரத்தில் சிதைந்தனர்.
லாரியின் முகப்பில்
பாவத்தின் சம்பளம் மரணம்...
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
{{comments.comment}}