மாலேகான் குண்டுவெடிப்பு.. பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உட்பட 7 பேர் விடுதலை

Jul 31, 2025,06:56 PM IST

மும்பை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா தாக்கூர் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 17 வருடமாக நடந்து வந்த வழக்கு இது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பெண் சாமியாரும், பின்னாளில் பாஜகவில் இணைந்து எம்.பியானவருமான பிரக்யா தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்களுக்கு எதிரான சாட்சியங்களும், ஆதாரங்களும் போதுமானதாக இல்லை என்று கூறி கோர்ட் விடுதலை செய்துள்ளது.


மாலேகான் வழக்கு குறித்த முழு விவரம்




2008 செப்டம்பர் 29 அன்று  மும்பையில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மாலேகான் பிகூ சௌக் அருகே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது மத ரீதியாக பதட்டமான பகுதியாகும். அப்போது ரம்ஜான் மாதமாகும். இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமான பேர் காயமடைந்தனர். 


இந்த சம்பவம் தொடர்பாக கீழ்க்கண்டோர் கைது செய்யப்பட்டனர்.


1. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்2.  லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித்

3. மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய்

4. அஜய் ராகிர்கர்

5. சுதாகர் திவேதி

6. சுதாகர் சதுர்வேதி

7. சமீர் குல்கர்னி


இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பல்வேறு பிரிவுகளின் கீழ், சதி, கொலை, கொலை முயற்சி, பகைமையை தூண்டுதல், மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டனர். வழக்கில் கைதான அனைவரும் பின்னர் படிப்படியாக ஜாமீனில் வெளியே வந்தனர். அதில் பிரக்யா தாக்கூர் எம்.பியும் ஆனார்.


முதலில் இந்த விசாரணையை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை (ATS) நடத்தியது. அப்போது ஏ.டி.எஸ்.ஸின் தலைவராக ஹேமந்த் கார்கரே இருந்தார். இவர் பின்னர் 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். அதுவும் கூட சர்ச்சையைக் கிளப்பியது. 


2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொருவராக இந்த வழக்கில் கைதுகள் நடைபெற ஆரம்பித்தது. குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் பிரக்யா தாக்கூருக்குச் சொந்தமானது  என்று கண்டறியப்பட்டது. அவர் அதை சதிகாரர்களுக்குக் கொடுத்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் "அபினவ் பாரத்" என்ற சிறிய தீவிரவாத குழுவின் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


ஏப்ரல் 2011 இல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) தலைமையிலான மத்திய அரசு விசாரணையை NIA-விடம் ஒப்படைத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், போதிய ஆதாரங்கள் இல்லாததால், 2016 இல் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MCOCA) பிரிவுகளை NIA கைவிட்டது, ஆனால் UAPA மற்றும் IPC பிரிவுகள் மீதமுள்ள ஏழு பேருக்கு எதிராக நீடித்தன.


NIA-வின் கூடுதல் குற்றப்பத்திரிகை பிரக்யா தாக்கூரை விடுவிக்கக் கோரியது, ஆனால் சிறப்பு NIA நீதிமன்றம் அதை மறுத்து, அவருக்கு எதிராக விசாரணையைத் தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது. விசாரணை முறையாக 2018 இல் தொடங்கியது.


இன்று தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்:


- குண்டுவெடிப்பு நடந்தது என்பதை அரசுத் தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளது, ஆனால் தேசிய புலனாய்வு முகமை (NIA) குண்டு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது.


- வெடிபொருளுக்கு RDX பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும், RDX லெப்டினன்ட் கர்னல் புரோஹித்தின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.


- புரோஹித்தான் வெடிகுண்டை தயாரித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.


- சம்பந்தப்பட்ட பைக் பிரக்யா தாக்கூர் உடையது என்பதை நிரூபிக்கவும் எந்த ஆதாரமும் இல்லை.


இந்த வழக்கில் அரசுத் தரப்பு 323 சாட்சிகளை விசாரித்தது, அதே நேரத்தில் பாதுகாப்புத் தரப்பு எட்டு சாட்சிகளை முன்வைத்தது. அரசுத் தரப்பு சாட்சிகளில் கிட்டத்தட்ட 40 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இதுவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக மாறி விட்டது. ஆதாரங்களில் 10,800 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடங்கும். இரு தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களும் மூன்று தொகுதிகளில், 1,300 பக்கங்களுக்கு மேல் இருந்தன.


இந்த வழக்கு 7 வருட விசாரணை காலத்தில் ஐந்து நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது. கடைசியாக நீதிபதி லஹோட்டி 2023 இல் வழக்கை எடுத்துக்கொண்டார். பல மாத இறுதி வாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 19 அன்று இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்