செக்கர் வானம் (செவ்வானம்)

Apr 23, 2026,10:30 AM IST

- அ. தாமஸ் 


கடலிடம் நீர் சொரிந்து தரணிக்கு நீர்வார்க்கும் நீர்க்கூரை நீ!

தானாய் ஒளிரும் சூரியனையும், ஒளியை உறிஞ்சி உமிழும்  நிலவையும் 

தனதாக்கி வெள்ளொளி பரப்பிய  மேகங்கள் விளையாடும் விரிந்த விளையாட்டுத் திடல் நீ!

கடலுக்கு பல வண்ணம் வழங்கும் வண்ணப் பெட்டகம் நீ! 


காலையும் மாலையும் மேனி சிவந்து வண்ணங்களால் வர்ணஜாலம் புரியும் அழகோவியம் நீ!

கரைந்திடும் பல மேகக் காட்சிகளால் பலர் கனவில் உதித்து நினைவில் நிலைப்பவள் நீ! 

ஆதவன் உதிக்கையில் அன்போடு அழைப்பதும் ,ஆதவன் மறைகையில் செந்நீரை விதைப்பதும் நீ!

வெள்ளிக் கம்பியாய் விழுந்திடும் மழையை தங்கக் கம்பியாய் காட்சிப்படுத்துபவள் நீ!




உயரே இருந்து உலகை உற்று நோக்கி அதன் உணர்வுகளை உள்ளுக்குள் வைத்து அமைதியாய் கடந்து செல்பவள் நீ!

தனியாய் செல்லும் பலருக்கும் துணையாய் நான் இருக்கிறேன் என்று தோள் கொடுப்பவள் நீ! 

தொடும் வரை தூரப் போகிறாய் தொட்டுவிட்டால் என்னுள் ஈரமாகிறாய் நீ!

நான் நினைப்பதை என் கண்முன்னே அடையாளப்படுத்துபவள் நீ!


கவலையோடு காண்பவருக்கு உன்னைக் கரைத்து அவர்களின் கவலை கரைப்பவள் நீ!

உன் இணையோடு கூடி மேகத்தைப் பெறாமல் இடியைப் பெற்றவள் நீ!

மானுடம் தூசியை வழங்கினாலும் அவர்களுக்கு நன்னீராக ஆசி வழங்குபவள் நீ!

நிலவை மறைப்பவளும் அதனைக் கரையாமல் காப்பவளும் நீ! 


வெறுமையும் செழுமையும் மாறி மாறிப் புகட்டி வாழ்வியல் தத்துவம் விளக்குபவள் நீ!

நிழலைக் கொடுத்து அமைதியையும், வெயிலைக் கொடுத்து ஆக்ரோசத்தையும் அடையாளப்படுத்துபவள் நீ!

காலை முதல் மாலை வரை உன் வண்ணம் மாறினாலும் எண்ணம் மாறாமல் மானுடம் காப்பதில் கருத்தாய் இருப்பவள் நீ!


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்