- வ. சரசுவதி
இந்திய வரலாற்றில் பல வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இருந்தாலும், அவர்களில் சிலர் மட்டுமே மக்களின் நலனுக்காக உண்மையான தியாகத்தைச் செய்தனர். அந்த அரியவர்களில் ஒருவராக ஜான் பென்னிகுயிக் (John Pennycuick) திகழ்கிறார். முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்தின் வறண்ட நிலங்களுக்கு உயிர் கொடுத்த ஒரு பொறியியல் மேதை, மனிதநேய சிந்தனையாளர் என்பதே அவரது பெருமை.
ஜான் பென்னிகுயிக் 1844ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே கணிதம், இயற்பியல், கட்டுமான அறிவு போன்றவற்றில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். பொறியியல் துறையில் சிறப்பாகக் கல்வி கற்ற அவர், பிரிட்டிஷ் அரசின் மெட்ராஸ் பிரெசிடென்சி பொறியியல் சேவையில் இணைந்தார். இதன் மூலம் இந்தியாவின் தென் பகுதியில் நீர்ப்பாசனத் திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இன்றைய மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன. மழை பொழிவு குறைவு, ஆறுகள் வறண்டு போதல், விவசாய நிலங்கள் பாழடைதல் போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்தன.

அதே சமயம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் மறுபுறம், பெரியாறு ஆண்டு முழுவதும் பெருமளவு நீரை ஏந்தி, வீணாக அரபிக் கடலில் கலந்துகொண்டிருந்தது. இந்த முரண்பாட்டை உணர்ந்த ஜான் பென்னிகுயிக், “இந்த நீரைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தால், ஒரு பெரிய விவசாயப் புரட்சி நிகழும்” என்ற தொலைநோக்கு கனவைக் கண்டார்.
அந்த காலத்தில் மலைகளை துளைத்து நீரை திருப்புவது என்பது மிகவும் ஆபத்தானதும் செலவுயர்ந்ததும் ஆகும். பல அதிகாரிகள் இந்தத் திட்டத்தை நடைமுறைக்கு ஒத்துவராதது என்று நிராகரித்தனர். ஆனால் ஜான் பென்னிகுயிக் தனது தொழில்நுட்ப அறிவையும் அனுபவத்தையும் கொண்டு திட்டத்தை அரசிடம் முன்வைத்தார். பல தடைகளுக்குப் பிறகு, 1887ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம் தொடங்கப்பட்டது.
அணை கட்டுமானம் எளிதானதாக இருக்கவில்லை. அடர்ந்த காடுகள் மற்றும் காட்டு விலங்குகள், கடினமான மலைப்பாதைகள், நவீன இயந்திரங்கள் இல்லாமை, மலேரியா, காலரா போன்ற நோய்கள், தொழிலாளர்களின் உயிரிழப்பு, அரசின் நிதி பற்றாக்குறை, இத்தனை சவால்களையும் மீறி, ஜான் பென்னிகுயிக் பணியை கைவிடவில்லை. அணை கட்டுவதற்கு சுர்க்கி (சுண்ணாம்பு, செங்கல் தூள், மணல் கலவை) பயன்படுத்தப்பட்டது. இது இன்று கூட அதன் உறுதியை நிரூபிக்கிறது.
அணை கட்டுமானத்தின் போது அரசின் நிதி தடைபட்டது. அந்த நேரத்தில் பணிகள் நின்றிருந்தால், திட்டமே கைவிடப்பட்டிருக்கும். அப்போது ஜான் பென்னிகுயிக், தனது சொந்த நிலங்கள், சொத்துகளை விற்று, அந்த பணத்தை அணை கட்டுமானத்திற்காக வழங்கினார். ஒரு அரசு அதிகாரி இவ்வாறு தனிப்பட்ட சொத்துகளை மக்களின் நலனுக்காக செலவிடுவது மிக அரிய செயல். இது அவரின் மனிதநேயத்தையும் தியாக மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதிகள் பாசன வசதி பெற்றன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையடைந்தன. நெல், கரும்பு, பருத்தி போன்ற பயிர்கள் செழித்தன. விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது. இதனால், ஒரு வறண்ட நிலம் வளமான விவசாயப் பிரதேசமாக மாற்றப்பட்டது.
ஜான் பென்னிகுயிக் பிரிட்டிஷ் ஆட்சியாளராக இருந்தாலும், தமிழர்களின் நலனையே முதன்மை கொண்டார். அதனால், தமிழ்நாட்டு மக்கள் அவரை அன்புடன் பெரியாறு தந்தை, தமிழக விவசாயத்தின் காவலர் என்று அழைத்தனர்.
இன்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் அவரது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. விவசாயிகள் அவரை தெய்வத்திற்குச் சமமாக நினைவுகூறுகிறார்கள்.
1911ஆம் ஆண்டு ஜான் பென்னிகுயிக் மறைந்தார். ஆனால் அவர் உருவாக்கிய முல்லைப் பெரியாறு அணை, நூற்றாண்டைக் கடந்தும் தமிழகத்திற்கு உயிர்நீராக செயல்படுகிறது. அவரது உடல் மறைந்தாலும், அவரது பணியும் பெயரும் என்றும் நிலைத்திருக்கிறது.
ஜான் பென்னிகுயிக் ஒரு பொறியாளர் மட்டுமல்ல; தொலைநோக்கு சிந்தனையாளர், மனிதநேயவாதி,தியாகத்தின் உருவகம் என்றே கூறலாம். நீர் இருந்தால் நாடு செழிக்கும் என்ற உண்மையை செயலால் நிரூபித்தவர் ஜான் பென்னிகுயிக். தமிழ்நாட்டின் பசுமைக்கு அடித்தளம் அமைத்த அந்த மனிதர், வரலாற்றில் என்றும் நினைவுகூறப்பட வேண்டியவர்.
(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}