- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
கன்னிப் பொங்கலை கொண்டாடுவதோடு இவரின் பிறந்த நாளையும் நினைவு கூறுவோம் . யாருடைய பிறந்தநாளை நினைவு கூறுவது?
சாதாரண மனிதர்களாக பிறந்து சாதனை நாயகர்களாக வரலாற்றில் பிரமிக்கும் மனிதர்கள் தான் காலம் கடந்தாலும் அழியாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தன்னுடைய சாதனையால் வரலாற்றில் தடம் பதித்தவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சிறப்பு வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கூறுவது மிக முக்கியம். அந்த வகையில் இன்றறைய நாளில் பிறந்த பெஞ்சமின் பிராங்கிளின் அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பிராங்கிளின், 1706-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். மொத்தம் 17 பிள்ளைகளில் பத்தாவதாகப் பிறந்தார். அவரது தந்தையார் சோப்பு, மெழுகுவர்த்திகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார். பெரிய குடும்பம் என்பதால் குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை.

ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்கிளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அவருடைய அந்தப் பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் விடுதலைப் பேரறிக்கையை எழுதும் ஆற்றலை அவருக்குத் தந்தது. அவருக்கு வாசிப்பில் இருந்த ஆர்வம் காரணமாகவே, அவரது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனைப் புத்தகங்களையும் படித்துத் தீர்த்து இன்பம் கொள்வார். அவர் நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் கைவசப்பட்டது.
பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறிப் பிலடெல்பியா சென்றார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க இதழ்களில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
1720-ம் ஆண்டு, பிராங்கிளின் பென்சில்வேனியா கெசட் (Pennsylvania Gazette) என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து புவர் ரிச்சர்ட்ஸ் அல்மனாக் (Poor Richard's Almanack) என்ற இதழைத் தொடங்கினார். மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ்தான் அவருக்குச் செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.
பிராங்கிளின் அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. அவர் குறைவான எரிமத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பைக் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார்.
பயிர்களுக்குச் செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று எடுத்துக் கூறினார். அவருடைய கருத்து ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டாலும், அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாகப் புரிந்து கொண்டது. இப்போதுகூட உலகம் முழுவதும் செயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.
பிராங்கிளின் மின்சாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு மின்னலில் கூட மின்னிலையாற்றல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது. அதேபோல், மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைப் பட்டம் ஆய்வின் மூலம் நிறுவினார். மின்னல், இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார்.
முதியவர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் ஒரே கண்ணாடியான இரட்டைக் குவியக்கண்ணாடி பிராங்கினின் கண்டுபிடிப்பாகும். தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் அவர் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் நற்பேறாகக் கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம்.
அமெரிக்கா விடுதலை பெற்ற பிறகு முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலைகளை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் படமும் மற்றொன்றில் பெஞ்சமின் பிராங்கிளினின் படமும் இடம்பெற்றிருந்தது.
பிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஏறத்தாழ இருபதாயிரம் பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
சிந்தனைச் சிதறல்.. நாளைய வளர்ச்சியின் அடிநாதமாய் அமைவது எது தெரியுமா?
{{comments.comment}}