மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரும், அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவல்னி, சிறைக்குள் மரணமடைந்துள்ளார்.
சிறைக்குள் வாக்கிங் போனபோது அவர் மயங்கி விழுந்து சுய நினைவை இழந்ததாகவும், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் சிறை வளாகத்தில் அலெக்ஸி நவல்னி அடைக்கப்பட்டிருந்தார். அவர் 19 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி வந்திருப்பது ரஷ்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நவல்னி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவல்னி மரணம் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அலெக்ஸியின் வழக்கறிஞர் தற்போது சிறைக்கு விரைந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து அதிபர் விலாடிமிர் புடினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தீவிர புடின் எதிர்ப்பாளர்
47 வயதான நவல்னி, ரஷ்யாவின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். அவருக்கு அங்கு மிகப் பெரிய ஆதரவு உண்டு. குறிப்பாக அதிபர் புடினின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர் அவர். உக்ரைன் போருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார். அதிபர் புடின் ஆட்சியின் ஊழல்கள் குறித்து அவர் யூடியூபில் ஆற்றிய உரைகள் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடும் நிலை உருவானது.
இந்த நிலையில்தான் அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு நோவிசோக் என்ற விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து ரஷ்யா திரும்பியதும், கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 19 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஆண்டு வடக்கு சைபீரியாவின் யமலோ நெநெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள ஆர்க்டிக் சிறை வளாகத்திற்கு நவல்னி மாற்றப்பட்டார்.
காதல் மனைவிக்கு கடைசி பதிவு
கடைசியாக தனது வழக்கறிஞர்கள் மூலமாக, மனைவி யூலியா நவல்னயாவுக்கு, காதலர் தினத்தையொட்டி தனது டெலிகிராம் சானலில் ஒரு பதிவு போட்டிருந்தார் நவல்னி என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் பேராதரவைப் பெற்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியின் திடீர் மரணம் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது கொலையா என்ற பெரும் விவாதம் வெடித்துள்ளது. நவல்னியின் மரணம், ரஷ்ய அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}