ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து வந்த.. எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறைக்குள் மரணம்!

Feb 17, 2024,07:39 AM IST

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரும், அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவல்னி, சிறைக்குள் மரணமடைந்துள்ளார்.


சிறைக்குள் வாக்கிங் போனபோது அவர் மயங்கி விழுந்து சுய நினைவை இழந்ததாகவும், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்க்டிக் சிறை வளாகத்தில் அலெக்ஸி நவல்னி அடைக்கப்பட்டிருந்தார். அவர் 19 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி வந்திருப்பது ரஷ்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




நவல்னி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவல்னி மரணம் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அலெக்ஸியின் வழக்கறிஞர் தற்போது சிறைக்கு விரைந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து அதிபர் விலாடிமிர் புடினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


தீவிர புடின் எதிர்ப்பாளர்


47 வயதான நவல்னி, ரஷ்யாவின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் ஆவார். அவருக்கு அங்கு மிகப் பெரிய ஆதரவு உண்டு. குறிப்பாக அதிபர் புடினின் ஊழல்களை அம்பலப்படுத்தியவர் அவர். உக்ரைன் போருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார். அதிபர் புடின் ஆட்சியின் ஊழல்கள் குறித்து அவர் யூடியூபில் ஆற்றிய உரைகள் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடும் நிலை உருவானது.


இந்த நிலையில்தான் அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு நோவிசோக் என்ற விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து ரஷ்யா திரும்பியதும், கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 19 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


கடந்த ஆண்டு வடக்கு சைபீரியாவின் யமலோ நெநெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள ஆர்க்டிக் சிறை வளாகத்திற்கு நவல்னி மாற்றப்பட்டார்.


காதல் மனைவிக்கு கடைசி பதிவு




கடைசியாக தனது வழக்கறிஞர்கள் மூலமாக, மனைவி யூலியா நவல்னயாவுக்கு, காதலர் தினத்தையொட்டி தனது டெலிகிராம் சானலில் ஒரு பதிவு போட்டிருந்தார் நவல்னி என்பது குறிப்பிடத்தக்கது.


மக்களின் பேராதரவைப் பெற்ற பிரதான எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியின் திடீர் மரணம் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது கொலையா என்ற பெரும் விவாதம்  வெடித்துள்ளது. நவல்னியின் மரணம், ரஷ்ய அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்