தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

Jul 08, 2026,06:07 PM IST

சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குதிரை பேர வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் கிடைத்துள்ளது.


ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) இளையராஜாவிடம், செந்தில் பாலாஜி குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாகப் புகார் எழுந்தது. சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் இந்த பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழக அரசியல் சூழலில் தவெக சட்டமன்ற உறுப்பினரை இலக்கு வைத்து குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்துள்ள இந்த விவகாரம், அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.




இந்த வழக்கில் தன் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுவதால், செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் (Anticipatory Bail) கோரி அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், இதில் உண்மை ஏதுமில்லை என்றும் அவர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் கடுமையான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. செந்தில் பாலாஜி தரப்பிலும் காரசாரமான வாதம் வைக்கப்பட்டது.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி இளந்திரையன் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீனை அளித்து உத்தரவிட்டார். அதன்படி இருவரும் தினசரி 2 வேளை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஏற்கனவே பல்வேறு சட்டப் போராட்டங்களைச் சந்தித்து வரும் செந்தில் பாலாஜிக்கு, இந்த புதிய குதிரை பேர வழக்கு மேலும் ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்