ஒரு மிடறு!

Jun 08, 2026,12:04 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஒரு மிடறு நீர் போதும்

என் விடாய்

தணிந்து விடும்.

குடுவை நீரில்

ஒரு கோப்பை;

ஏன் தர மறுக்கிறாய்?


ஒரே ஒரு சொல் போதும்

என் வெறுமை களைய,

ஒரு நூறு கவிதை  பாடும் வாயினால்

ஒரு சொல் எனக்காக உதிராதா?




ஒரே ஒரு பார்வை போதும்

என் உயிர் துளிர் விட;

வெற்றுப் பார்வை விட்டு

சற்றே கனிவுடன்

ஒரு பார்வை 

 என் உயிர் தங்குமே!


ஒரே ஒரு தீண்டல் போதும்;

என் நம்பிக்கை  நீள;

ஒரு  தொடுகையில்

'நான் இருக்கிறேன்'

என்று

இயம்பலாகாதா? 


ஆகும்!

ஆகாதெல்லாம் ஆகும்!


நீ நீயாக இருந்தால் மட்டுமே ஆகும்!


அதற்கு, 

நீ நானாக வேண்டும்!

மனப்பிணக்கம் விட்டு!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்