சிங்கப்பூரில் சிறப்பாக நடந்தேறிய பொழில் இலக்கியச் சங்கமம் 2026

Apr 15, 2026,04:52 PM IST

சிங்கப்பூர்: "வாழ்வியல் இலக்கியப் பொழில்" அமைப்பின் 9ஆவது ஆண்டாக நடைபெற்ற “பொழில் இலக்கிய சங்கமம் - 2026” விழா (102ஆவது மாதந்தர நிகழ்ச்சி)  12-04-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் (5ஆவது தளம்) நடைபெற்றது.


விழாவின் தொடக்கமாக ‘மூப்பில்லா முதல்மொழியே’ என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றது. அடுத்து, சுப்ரமணியன் பூஜா ஸ்ரீ, “திக்குக்கள் எட்டும் சிதறி” என்னும் பாரதியாரின் மழை பாடலுக்கு அழகாக பரதநாட்டியம் ஆடினார். தொடர்ந்து சங்கீதம் அங்கத்தில் ஜானவி நாராயணன் பாரதியார் பாடல் ஒன்றை அழகாக பாடினார்.




திருமதி உஷா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாலைப்பொழுதில் இலக்கியப் பொழிலின் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார். தொடர்ந்து, வாழ்வியல் இலக்கியப் பொழிலின் "பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்த

வெற்றியாளர்கள் மீண்டும் படைத்தனர். 


மாறுவேடப் போட்டியில் சாய் பாவனா அவர்கள் “வேலு நாச்சியாராக வந்து அசத்தினார். சங்ககால காட்சி போட்டியில் பிரவிதா பிரகாஷ்ராஜ் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் பாடலுக்கு நல்லதொரு காட்சி அமைத்து ஓரங்கமாக நடித்துக் காட்டினார். 


வேரும் விழுதும் போட்டியில் அருள்பிரகாஷ், மோகனபிரியா, தமிழோவியா, மேகவர்தினி ஆகியோர் குடும்பமாக சிலப்பதிகாரத்தில் வரும் “வழக்குரைக் காதை” கதையை வேராகப் பெற்றோரும் விழுதாகப் பிள்ளைகளும் பங்கெடுத்துக் காட்சிப்படுத்தினர். படைப்பாற்றல் பிரிவில், முதல் பரிசை வென்ற அருள்ஜோதி “சிந்தை வாழும் தமிழும் என் ஈடுபாடும்” என்னும் கருப்பொருளில் அமைந்த பேச்சை மீண்டும் படைத்தார்.




அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்முடைய தலைமையுரையில் “வேள்பாரி” என்ற தலைப்பில் வேள்பாரி பற்றி  கபிலர் எழுதிய சில புறநானூற்றுப் பாடல்களோடு விரிவாக விளக்கினார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் த. சுந்தரராஜ் அவர்கள் “ஈர நல் மொழி” என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார். மலேசியாவிலிருந்து வந்திருந்த மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் (திருவள்ளுவர் ஆய்விருக்கை, இந்தியவில் துறை) ஆ. செல்லபெருமாள் “வேம்பின் பைங்காயென் தோழி தரினே” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 


அமைப்பின் பொருளாளர் திருமதி மஹ்ஜபீன் “சிந்தையள்ளும் சீறா” என்ற தலைப்பில் உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணத்தில் வரும் சில பாடல்களோடு சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த, உலகத் தமிழ்மாமணி சிங்கப்பூர் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் அவர்கள் ‘ஐந்திணை’ என்ற தலைப்பில் கலகலப்பாக உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் மற்றும் உரையாற்றிய அனைவருக்கும் பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.


நாட்டுப்புற பாடல்களுக்குச் சிறுமிகளும் நடமாடினர். முல்லைத் திணையில் வரும் சில பாடல்களோடு நாடக பாணி வடிவில் அழகாக விளக்கப்பட்டது. கும்மி பாடலுக்கு பெண்கள் நடனமாடினர்.  இலக்கியப் போட்டி நடுவர்களுக்கும் பல்சுவை அங்கங்களில் கலந்து கொண்டவர்களுக்கும் நினைவுப்பரிசுகளைச் சிறப்பு விருந்தினர் வழங்கினார். 


திருமதி மோகனபிரியா வழிநடத்திய அவையில் இருந்த பார்வையாளர்களுக்கு நேரடி திரை விளையாட்டு (Kahoot) போட்டி, சிறுவர்களுக்கான வினாடி வினா போட்டி ஆகிய போட்டிகள் நடைப்பெற்றன. சங்ககால காட்சி போட்டி வெற்றியாளர்கள், வேரும் விழுதும் போட்டி வெற்றியாளர்கள், படைப்பாற்றல் போட்டி வெற்றியாளர்கள், மாறுவேடப் போட்டி வெற்றியாளர்கள் என அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 




நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, திருமதி தீபிகா மற்றும் திருமதி சவிதா இருவரும் அழகுற நிகழ்ச்சியைக் கலகலப்பாக நெறிப்படுத்தினர். செல்வி ஜீவஜோதிகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாவருக்கும் மறவாமல் நன்றி கூறினார்.  அதனைத் தொடர்ந்து இரவு சிற்றுண்டியுடன் சிறப்பான முறையில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


முகநூலில் கண்டுகளிக்க:

http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg

அமைப்பின் இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com

 

(செய்தி, புகைப்படம்: எல்ல.கிருஷ்ணமூர்த்தி, வாழ்வியல் இலக்கியப் பொழில், சிங்கப்பூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்