வாஷிங்டன்: இந்தியர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறி போவதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரமுகரும், வர்த்தகருமான மர்ஜோரி டெய்லர் கிரீன் புலம்பியுள்ளார்.
ஒரு பக்கம் இந்தியாவுடன் நட்பு பாராட்டுவது போல நடந்து கொண்டாலும் மறுபக்கம் இந்தியாவுக்கு அதிக வரி விதித்து இரட்டை முகத்தைக் காட்டி வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த நிலையில்
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் டெய்லர் கிரீன், இந்தியர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறி போவதாக குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ஜோரி டெய்லர் கிரீன் ஜார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆளும் குடியரசுக் கட்சி அரசியல்வாதி. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக இருப்பவர். தனது தீவிர வலதுசாரி நிலைப்பாடுகள், சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குப் பெயர் பெற்றவர். அதிபர்
டொனால்ட் டிரம்ப்-இன் தீவிர ஆதரவாளராகவும், "மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்" (Make America Great Again) இயக்கத்தின் முக்கிய முகமாகவும் கருதப்படுகிறார்.
9/11 தாக்குதல்கள், பள்ளிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், மற்றும் கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி சர்ச்சைக்கிடமான கருத்துக்களை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியவர் இவர்.
இந்த நிலையில் மர்ஜோரி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்கர்களின் வேலைகளைப் பறிப்பதாக லேட்டஸ்டாக கூறியுள்ளார் மர்ஜோரி. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் போட்ட கருத்தில்,
அமெரிக்க வேலைகளை இந்திய H-1B விசாக்கள் மூலம் மாற்றுவதை நிறுத்துங்கள் என்று அதிபர் டிரம்ப்புக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
H-1B விசா என்றால் என்ன?
H-1B விசா என்பது அமெரிக்க நிறுவனங்கள் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும் ஒரு விசா ஆகும். இது முக்கியமாக தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விசாக்களில் பெரும்பாலானவை இந்திய நிபுணர்களுக்கே வழங்கப்படுகின்றன. அவர்கள் முதலில் F-1 விசா மூலம் சர்வதேச மாணவர்களாக அமெரிக்காவுக்கு வந்து படிக்கிறார்கள்.
படித்த பிறகு, அவர்கள் தற்காலிக வேலை அனுமதிக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதற்கு OPT (Optional Practical Training) என்று பெயர். பிறகு H-1B விசாவுக்கு விண்ணப்பித்து அமெரிக்காவில் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அளித்த தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட H-1B விசாக்களில் கிட்டத்தட்ட 70% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த திட்டத்தின் கீழ் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் பெறும் நாடாக
இந்தியா உள்ளது.
{{comments.comment}}