டில்லி : கரூர் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார் ஏற்கனவே விசாரித்து வரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி பெஞ்ச், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதே போல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிய மனுக்களை மதுரை ஐகோர்ட் கிளை நிராகரித்தது.
இதனால் இந்த உத்தரவுகளை எதிர்த்து தவெக, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், பாஜக ஆகியோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் அக்டோபர் 10ம் தேதியன்று விசாரித்தது. அப்போது, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை மதுரை ஐகோர்ட் கிளைக்கு பதிலாக சென்னை ஐகோர்ட் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏன்? கரூர் மருத்துவமனையில் உடற் கூராய்வு செய்வதற்கு எத்தனை டாக்டர்கள் உள்ளனர்? ஒரே இரவில் 31 பேருக்கு எப்படி உடற்கூராய்வு செய்யப்பட்டது? அந்த மருத்துவமனையில் எத்தனை உடற்கூராய்வு மேஜைகள் உள்ளன? என்பது உள்ளிட்ட பல சரமாரியான கேள்விகளை தமிழக அரசுக்கு முன் வைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்ட பிறகும் அதிகாரிகள் பலரும் இது தான் நடந்தது என செய்தியாளர்களை சந்தித்து கூறினார்கள். இது தான் நடந்தது என ஏற்கனவே முடிவு செய்து விட்டு, விசாரணையை நடத்துவதால் தமிழக போலீஸ் அதிகாரிகள் இந்த விசாரணையை நடத்தினால் உண்மை வெளியே வராது. அதனால் சிபிஐ விசாரணை நடத்தி, உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை வெளி கொண்டு வர வேண்டும் என்ற வாதங்களை முன் வைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கு தங்களுக்கு அவகாசம் வேண்டும் என தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, இந்த மனு மீதான தீர்ப்பை அக்டோபர் 13 ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவைப் பிறப்பித்தது. தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள்
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கை இனி சிபிஐ விசாரிக்கும்
- ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலையிலான 3 பேர் கொண்ட குழு இந்த சிபிஐ விசாரணையை கண்காணிக்கும். இந்தக் குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாடு கேடராக இருக்கலாம். அதேசமயம், இவர்கள் தமிழ்நாட்டுக்காரராக இருக்கக் கூடாது.
- மாதந்தோறும் இந்த விசாரணையை 3 பேர் கொண்ட குழு கண்காணிக்கும்
- நியாயமான விசாரணை அவசியம் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.
- மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நிலுவையில் இருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது எல்லை வரம்பை மீறிய செயல்.
- எஸ்ஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி எப்படி உத்தரவிட்டார் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை. மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக இதை கருதுகிறோம் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}