Thangalakshmi Poems: ஒரு சூரியன்.. ஒரு அந்திவானம்.. சில கவிதைத் துளிகள்!

Apr 17, 2026,11:56 AM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


சூரியன்


நின்ற இடத்தில் இருந்து கொண்டே

வானில் வர்ணஜால சித்திரம் தீட்டும்

விசித்திரத் தூரிகை – சூரியன்!


--


ஆதவன்


ரம்யமான ரணகளம்

அந்திவானின்

அஸ்தமன ஆதவன்!


--


அந்திவானம்


மேகப் புரவியில் சூரியப் புரவலன்

விரைந்து சென்ற குருச்சேத்திரக் களமாய்

அந்தி வானச் சிவப்பு!


--


பகல் ஒளி




இருந்தாற் போல் இருந்து

சொல்லாமல் கொள்ளாமல்

எங்கு சென்றாயோ?

ஐயோ பாவம்... இருளில் தொலைந்து போனாயோ!


--


தியாகச் செம்மல் 


என் இனிய பாதக்குறடே

என்னை உன் உச்சந்தலையில் ஏந்தி

உள்ளங்கால்கள் தேய உழைக்கும்

உயர்ந்த உள்ளம் உடையவனே!


காதலியின் கிள்ளல் வாங்கும்

காதலன் போலப்

பதமான முள்ளைத் தாங்கும்

இதமான இனியவனே!


தனிமையில் தனிவழி நடக்கையில்

உடன்வரும் உற்ற நண்பனே!


கயமைக் கண்கள் நோக்கிக்

கடைவாய் ஏளனம் பேசிக்

கரையான் கைகள் நீண்டால்

என் கைகளாய் அவதரிப்பவனே!


பயணங்கள் தோறும்

என்னோடு பயணிக்கும்

பண்பான பாட்டாளியே!


உன்மேல் என்னைத் தாங்கி

உயிர் கரையும் வரை

உறங்காத உண்மைக் காதலனே!


சப்தங்களற்ற சந்திலும் என்னோடு

சஞ்சரிக்கும் சப்த ஸ்வரமே!


குதிரைக்கு லாடம் போல்

எனக்கு நீ,

இனிய குளம்படி ஓசைபோல்

தாளலயத்தோடு வரும் தானையே!


சந்திரனோ தேய்ந்து வளரும்

நீயோ தேய்ந்து எனை வளர்த்தாய்

நீயல்லவோ தியாகச் செம்மல்!!!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்