ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் விமான நிலையம் கட்டுவதற்குத் தேவையான இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது. 2 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களை விரைவில் இந்திய விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரமானது, தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் உள்ள தொழில் நகரமாகும். கிட்டத்தட்ட பெங்களூரின் சீதோஷ்ணம் உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட ஓசூர் நகரை மிகப் பெரிய தொழில்நகரமாக்க திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு அம்சமாக, ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
2000 ஏக்கர் பரப்பளவில் ஓசூரில் விான நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். ஏற்கனவே ஓசூர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களையும் தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 2 இடங்களை தமிழ்நாடு அரசு தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு இடங்களுமே ஓசூர் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ளதாக தெரிகிறது. இந்த இடங்கள் குறித்த விவரம் இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.
நான்கு இடங்களில் இரண்டு இறுதியாக தேர்வு
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 4 இடங்களில் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவன உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். தோகரை அக்ரஹாரம், சூளகிரி, தாசபள்ளி மற்றும் தனியார் விமான நிறுவனமான தனேஜா நிறுவனத்தின் ஓடு பாதை உள்ள இடம் என அந்த நான்கு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதிலிருந்துதான் இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
தோகரை அக்ரஹாரம்: இந்தப் பகுதியில்தான் தனேஜா விமான நிறுவன ஓடுபாதை உள்ளது. இது ஓசூர் விமான ஓடுபாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடமும், 10 கிலோமீட்டர் தூரத்துக்குள் இன்னொரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனேஜா நிறுவன ஓடு பாதையையும் சேர்த்து கையகப்படுத்துவது குறித்து திட்டம் உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்துடன் பேசப்பட்டு வருகிறது.
சூளகிரி: சூளகிரிக்கு அருகே ஓசூரிலிருந்து தென் கிழக்கே ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தாசப்பள்ளி: ஓசூர் விமான ஓடுபாதையிலிருந்து இது 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தற்போது தனியார் விமான ஓடு பாதையின் உரிமையாளரிடமும் கூட தமிழ்நாடு அரசு பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுவரை உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

நீண்ட கால கோரிக்கை:
ஓசூரில் விமான நிலையம் தேவை என்று நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. விமான நிலையம் வந்தால் ஓசூர் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுமைக்கும் கூட தொழில் வளர்ச்சி மிகப் பெரிய மறுமலர்ச்சியை அடையும் என்பது தொழில்துறையினரின் கணிப்பாகும்.
இதுகுறித்து இந்திய தொழிலக சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவரும், வீல்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநருமான ஸ்ரீவத்ஸ் ராம் கூறுகையில், பிராந்திய ஒத்துழைப்பு, பெங்களூருடன் இணைந்த ஓசூரின் வளரச்சி, தொழில் வளர்ச்சி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி உள்ளிட்டவை புதிய வடிவம் பெறும், உத்வேகம் அடையும்.
ஓசூரை மிகப் பெரிய தொழில் மையமாக மாற்ற இந்த விமான நிலையம் உதவும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு மிகப் பெரிய வளர்ச்சியை எட்ட ஓசூர் உதவும். கடந்த பல ஆண்டுகளாகவே ஓசூர், ஆட்டோமொபைல் துறையில் கோலோச்சி வருகிறது. இது மேலும் விரிவடையும் என்றார்.
ஓசூர் மாநகரமாக விரிவடையும்
தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலையத் திட்டம் வேகம் பிடிக்கத் தொடங்கியிருப்பதையே இந்த இடத் தேர்வு உணர்த்துகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது ஓசூர். பெங்களூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 306 கிலோமீட்டர் தொலைவிலும் ஓசூர் அமைந்துள்ளது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்கள் இங்கு உள்ளன. நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான அசோக் லேலன்ட், டிவிஎஸ், கேட்டர்பில்லர், ஆதர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இங்கு தங்களது தொழிற்கூடங்களை வைத்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு முதல் ஓசூர் நகராட்சியானது, மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. புதிய விமான நிலையம் அமையும்போது ஓசூர் நகரம், மாநகரமாக விரிவடையும். கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் பெங்களூரு என்று கூறும் அளவுக்கு இதன் வளர்ச்சி விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}