- ஸ்வர்ணலட்சுமி
வெள்ளிக்கிழமைகளில் வைபவ லட்சுமி பூஜை வழிபாடு செய்ய மிகவும் உகந்த நாள். வைபவ லட்சுமி பூஜை என்பது லட்சுமி தேவிக்கு செய்யப்படும் ஒரு சிறப்பு வழிபாடு ஆகும்.இந்த பூஜை செல்வம் ,செழிப்பு, மன அமைதி, குடும்ப ஒற்றுமை ,குடும்ப நன்மை பெருக பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யப்படுகிறது.
லட்சுமி தேவி இவர் திருமாலின் பத்தினி. செல்வத்தையும், செழிப்பையும் வழங்கும் தேவதை ஆவார் . வைபவ லட்சுமி என்பது செல்வத்தைக் குறிக்கும் லட்சுமி தேவியின் உருவம் ஆகும்.
செல்வம் ,செழிப்பு, அதிர்ஷ்டம், மகிழ்ச்சி போன்றவற்றுக்குரிய தேவதையாக கருதப்படுகிறார் லட்சுமிதேவி. மேலும் லட்சுமி தேவி, திருமகள், அலைமகள், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி ,ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.
வைபவ லட்சுமி பூஜை என்பது வெள்ளிக்கிழமை தொடங்குவது மிகவும் சிறப்பு 11 வெள்ளிக்கிழமை அல்லது 21 வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்வது, மாலை 6 மணிக்கு துவங்கி பூஜை செய்தல் மிகுந்த நன்மை பயக்கும். சிலர் வீடுகளில் லட்சுமி தேவியின் உருவப்படம் அல்லது சிலை வைத்து வழிபடுவார்கள் ."ஜெய் மகாலட்சுமி" என்று உச்சரித்து கலசம் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி தேங்காய், மாவிலை வைத்து வழிபடுவர். கலசத்திற்கு சந்தனம், மஞ்சள் ,குங்குமம் வைத்து அதனை சுற்றி சிவப்பு துணி கட்டி வழிபாடு செய்வர்.
வைபவ லட்சுமி பூஜை புத்தகம் வாங்கி அதில் உள்ளபடி பூஜை மேற்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெற்றிலை ,பாக்கு ,நெய் தீபம், அரிசி பாயாசம், பழங்கள் ,பால் பாயாசம் சர்க்கரை பொங்கல் என்று நைவேத்தியமாக வைத்து விரதம் மேற்கொண்டு, பூஜை செய்து
லட்சுமி அஷ்டோத்திரம் படித்து தீப தூப ஆராதனை செய்து விரதத்தை முடிப்பது சிறப்பானது.
வைபவ லட்சுமி உருவான கதையை படித்து இந்த பூஜை செய்த பிறகு 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் பூஜை புத்தகங்கள் வாங்கி அதனுடன் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு தாலிச்சரடு, ஒரு ரூபாய் நாணயம், வாழைப்பழம் ,மலர்கள் ஒரு தட்டில் வைத்து சுமங்கலி பெண்களுக்கு கொடுக்க செல்வம் பெருகும் .மனதில் சந்தோஷம் ,நிம்மதி உண்டாகும் .இந்த பூஜையை குபேர தம்பதிகள் செய்ததால் அவர்களுக்கு சங்க நிதியும், பதுமநிதியும் கிடைத்தன.
பெண்கள் தங்களால் இயன்ற போது இந்த பூஜை தொடர்ந்து செய்வது அதீத நன்மை பயக்கும் .பூஜை செய்து முடித்த பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு அட்சதை ,புஷ்பம் சமர்ப்பித்து கலசத்தை வடக்கு பக்கம் சிறிது நகர்த்தி வைக்கவும். கலச தீர்த்தத்தை சிறிதளவு உட்கொண்டு வீடு முழுவதும் தெளிக்கவும். மீதமுள்ள நீரை துளசிச் செடியிலோ அல்லது மருதாணி செடியிலோ, கிணற்றிலோ ஊற்றவும். வைபவ லட்சுமி பூஜை சம்பூரணம்.
முழு பக்தியுடன், நம்பிக்கையுடன், நேர்மையுடன் விரதம் மேற்கொண்டு மனதளவில் "ஜெய் வைபவட்சுமியே நமஹ" என்று கூறி இயன்றவர்கள் வைபவ லட்சுமி பூஜை செய்து வளமோடும் நலமோடும் வாழ்வோமாக !.....மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்
ஸ்வர்ணலட்சுமி.
{{comments.comment}}