தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்: நயினாருக்கு டிடிவி தினகரன் அட்வைஸ்

Feb 14, 2026,12:53 PM IST

சென்னை: அரசியல் களத்தில் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து முன்வைத்த சர்ச்சைக்குரிய விமர்சனம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.


விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சேலத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், விஜயே பனையூரை விட்டு வெளியே வா, வீட்டை விட்டு வெளியே வா என சிலர் சொல்கிறார்கள் என கூறியதுடன், தமிழ்நாடே என்னுடைய வீடு தான். இங்குள்ள 8 கோடி மக்களும் என்னுடைய குடும்பத்தினர்கள் தான் என பதிலளித்து பேசினார். விஜய்யின் இந்த பேச்சு குறித்து தமிழ் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.




அதற்கு பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். நடிகை த்ரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும் என தெரிவித்தார். விஜய்யை ஒரு நடிகையின் பெயரோடு தொடர்ந்து படுத்தி நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, விஜயை விமர்சித்தது அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் கண்டனங்களைப் பெற்றது.


இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், யாராக இருந்தாலும், கண்ணியம் காக்கப்பட வேண்டும். அரசியலில் ஒருவரை விமர்சிக்கும் போது கொள்கை ரீதியாக விமர்சிக்கலாமே தவிர, தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதையும், தரக்குறைவாகப் பேசுவதையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.பொதுவாக நயினார் நாகேந்திரன் அநாகரீகமாகப் பேசுபவர் அல்ல. அவர் எப்போதும் நிதானமாகப் பேசக்கூடியவர். எனவே, அவர் இவ்வாறு பேசியிருப்பது ஆச்சரியமாக உள்ளது.


"நயினார் நாகேந்திரனின் அந்த முழுப் பேட்டியையும் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், யாராக இருந்தாலும் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பது ஆரோக்கியமான அரசியல் கிடையாது" என்று அவர் தெளிவுபடுத்தினார். தமிழக அரசியலில் விஜயின் வருகை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற கட்சித் தலைவர்கள் அவர் மீது வைக்கும் விமர்சனங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. இந்நிலையில், தினகரனின் இந்த அறிவுரை, நாகரீகமான அரசியலை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்