டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

Mar 21, 2026,03:06 PM IST


சென்னை: திமுக அரசு மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். தான் டில்லி வந்ததற்கு என்ன காரணம், எதற்காக டில்லி வந்துள்ளோம் என்பது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.


டில்லி பயணம் ஏன்?


தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி புறப்பட்டு சென்றுள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஆகியோரும் டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் டில்லி பயணம் குறித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இது குறித்து டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது விளக்கம் அளித்துள்ளார் டிடிவி தினகரன்.




அவர் கூறுகையில், "நாங்கள் டெல்லியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச வரவில்லை. தொகுதி பங்கீடு குறித்து இபிஎஸ் தான் முடிவு செய்வார். மாறாக, எதிர்வரும் தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்கள் குறித்தே ஆலோசனை நடத்தினோம். மத்திய அமைச்சர் அமித் ஷாவால் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வர முடியுமா? அதனால் தான் அவரை சந்திக்க நாங்கள் டில்லிக்கு வந்தோம். நாங்கள் டெல்லிக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது?" தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் டெல்லிக்கு வந்தாலே முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடுகிறது. எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர் அச்சத்துடன் கவனிக்கிறார்" எனத் தெரிவித்தார்.


மக்களை இனியும் ஏமாற்ற முடியாது:


மற்றொரு முக்கிய விவகாரமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை முன்வைத்து தமிழக அரசு செய்யும் அரசியலை அவர் கடுமையாகச் சாடினார். ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கும் தமிழக அடையாளத்திற்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசிய அவர்,"CSK அணியைத் தமிழ்நாட்டின் அணி என்று நாம் கொண்டாடுகிறோம். அந்த அணிக்குத் தலைமை தாங்குவது தோனி. ஆனால், அந்த அணியில் எத்தனை தமிழக வீரர்கள் இருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு போய் முதல்வரை போராட சொல்லுங்கள். டெல்லி, தமிழ்நாடு என்று பிரிவினை பேசி இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்