சென்னை: அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கப் போவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது, பொய்யான செய்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வைத்து பல்வேறு கட்சிகளும் விதம் விதமாக அரசியல் செய்து வருகின்றன. பல்வேறு ஊகங்களும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அதிமுக - தவெக கூட்டணி அமைக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதை திட்டவட்டமாக அக்கட்சி தற்போது மறுத்துள்ளது.
இதுதொடர்பாக தவெகவின் தலைமை நிலையச் செயலகம் சார்பாக கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆடசி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.
எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}