சென்னை: மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கட்சியின் பேனர்கள் வைக்கக்கூடாது என கட்சினருக்கு தவெக உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில்
தவெக தலைவர்
விஜய் பிறந்நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட வாழ்த்து பேனர் சரிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கட்சியினருக்கு தவெக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்பு கட்டளையின் படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன் மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாட்டுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை, எந்த சூழலிலும் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை.
நம் வெற்றித் தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டித்துடன் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களில் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக்கூடாது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
{{comments.comment}}