வெப்ப அலை : சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்!

Jun 01, 2026,02:27 PM IST

டில்லி : கோடைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


குறிப்பாக, பல மாநிலங்களில் கடுமையான 'வெப்ப அலை' (Heat Wave) வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மத்திய சுகாதார அமைச்சகம் அவசர வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.


இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த முக்கிய வழிமுறைகள் இதோ:


1. மதிய நேரப் பயணங்களைத் தவிர்க்கவும்:




மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் மிக உச்சத்தில் இருக்கும். எனவே, இந்த குறிப்பிட்ட நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்வதையோ அல்லது தூரப் பயணங்கள் மேற்கொள்வதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


2. கடினமான உடல் உழைப்பைத் தவிர்க்கவும்:




மதிய வேளைகளில் கடுமையான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளி இடங்களில் வேலை செய்பவர்கள் இந்த நேரத்தில் போதிய ஓய்வு எடுத்துக்கொள்வது அவசியமாகும்.


3. சமையலறை காற்றோட்டம் முக்கியம்:


உச்சக்கட்ட வெயில் நேரத்தில் சமையல் செய்வதைத் தவிர்க்கப் பாருங்கள். சமையல் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பின், சமையலறையில் போதுமான காற்றோட்டம் (Ventilation) இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம். இல்லையெனில், மூச்சுத்திணறல் அல்லது மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.


4. தவிர்க்க வேண்டிய பானங்கள்:


உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறோம் என்ற பெயரில் பலர் காஃபின் கலந்த பானங்களை அருந்துகின்றனர். ஆனால், மது, தேநீர், காபி மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவை உடலை மேலும் வறட்சியடையச் செய்து, நீர்ச்சத்தைப் (Dehydration) பறித்துவிடும்.


5. உணவு முறையில் கட்டுப்பாடு:


அதிக புரதம் (Protein) கொண்ட உணவுகளை இந்த வெயில் காலத்தில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், கோடையில் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் என்பதால், பழைய உணவுகளைச் (மிஞ்சிய உணவுகள்) சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எப்போதும் புதிய மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.


பொதுமக்களுக்கான கூடுதல் விழிப்புணர்வு: தாகம் எடுக்காவிட்டாலும் சீரான இடைவெளியில் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் செல்லும்போது பருத்தி ஆடைகளை அணியவும், குடை அல்லது தொப்பியைப் பயன்படுத்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்