வைகுண்ட ஏகாதசி 2025 : விரதம் இருந்து கண் விழிக்க வேண்டிய நேரமும், விரத முறையும்

Jan 09, 2025,03:50 PM IST

சென்னை : பெருமாளுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான விரதம் ஏகாதசி விரதமாகும். விரதங்களிலேயே மிக உயர்ந்த புண்ணிய பலன்களை தந்து, பாவங்களை போக்கி, சொர்க்கத்தை அடைய செய்யும் விரதம் ஏகாதசி விரதமாகும். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி வந்தாலும் வருடத்திற்கு ஒருமுறை மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி நாளிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து, பெருமாளை மனதார வழிபடுவது வழக்கம்.


மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் தான் அனைத்து வைணவ தலங்களிலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறும். சொர்க்காவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டு, நாமும் சொர்க்கவாசலை கடந்து சென்றால் நமக்கும் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனைத்து விதமான பாவங்களையும் போக்கி, சகல விதமான நலன்களையும் தரக் கூடியது வைகுண்ட ஏகாதசி விரதமாகும்.




2025 ம் ஆண்டில் கூடுதல் சிறப்பாக இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வருகின்றன. ஜனவரி 10ம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசியும், டிசம்பர் 30ம் தேதி மற்றொரு வைகுண்ட ஏகாதசியும் அமைய உள்ளன. ஜனவரி 10ம் தேதி வருவது 2025ம் ஆண்டின் முதல் ஏகாதசி விரதம் ஆகும். ஜனவரி 09ம் தேதி பகல் பகல் 12.04 மணிக்கு துவங்கி, ஜனவரி 10ம் தேதி காலை 10.02 வரை ஏகாதசி திதி உள்ளது. அதற்கு பிறகு துவாதசி துவங்கி, ஜனவரி 11ம் தேதி காலை 08.13 மணி வரை உள்ளது. 


பொதுவாக வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது தசமி திதியில் துவங்கி, ஏகாதசியில் கண் விழித்து, துவாதசியில் பாரணை செய்து என மொத்தம் 3 நாட்கள் இருக்கப்படும் விரதம் ஆகும். அதனால் ஜனவரி 09ம் தேதி பகல் பொழுதுடன் அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜனவரி 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் கோவில்களில் திறக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை தரிசித்து, பெருமாளை தரிசித்து விட்டு, பெருமாளின் நாமங்கள், மந்திரங்களை சொல்லி விரதத்தை தொடர வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம், தசாவதார கதைகள் போன்றவற்றை படிப்பது நல்லது.


ஜனவரி 10ம் தேதி பகலில் தூங்கக் கூடாது. ஜனவரி 10ம் தேதி இரவு கண் விழிக்க வேண்டும். ஜனவரி 11ம் தேதி காலை 08.13 மணிக்கே துவாதசி திதி முடிந்து விடுவதால் அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து பலவிதமான காய்கறிகள் சேர்த்து சமைத்து, பெருமாளுக்கு தளிகை போட்டு, நைவேத்தியம் செய்த பிறகு நாமும் சாப்பிட்டு, உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும். ஜனவரி 11ம் தேதி பகலிலும் தூங்கவோ, வழக்கமான உணவுகள் எடுத்துக் கொள்ளவோ கூடாது. அன்று மாலை 6 மணிக்கு பிறகு வீட்டில் விளக்கேற்றி, பெருமாளை வழிபட்ட பிறகே விரதத்தை நிறைவு செய்து, அதற்கு பிறகே தூங்கச் செல்ல வேண்டும். அதற்கு பிறகே வழக்கமாக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 


ஜனவரி 11ம் தேதி காலை அனைத்து வகையான காய்கறிகளையும் சேர்த்து சமைக்க வேண்டும். அவற்றில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அன்று முருங்கைக்கீரை சமைத்தால் 30 வகையான காய்கறிகள் சமைத்ததற்கும், அகத்திக்கீரை சமைத்தால் 60 வகையான காய்கறிகள் சமைத்ததற்கும் சமம். இவை இரண்டையும் சேர்த்து சமைத்தால் 90 வகையான காய்கறிகளால் சமையல் செய்து, பெருமாளுக்கு படைத்ததற்கு சமமாகும். ஜனவரி 10ம் தேதி முழுவதும் உணவு ஏதும் சாப்பிடாமல் விரதம் இருந்து விட்டு, முழுமையான உணவு சாப்பிடும் போது வயிற்றில் புண்கள் ஏதும் ஏற்பட்டு, பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய, அதே சமயம் அனைத்து சத்துக்களும் உடலில் சேர வேண்டும் என்பதற்காக அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்